தேருக்கு அடியில் சிக்கிய 5 வயது குழந்தை.. உடல் நசுங்கி உயிரிழப்பு.. கேரள கோயில் திருவிழாவில் சோகம்!
திருவனந்தபுரம்: கொல்லம் அருகே உள்ள புகழ்பெற்ற கொட்டாங்குளங்கரா கோவில் திருவிழாவின்போது ஐந்து வயது சிறுமி ஒருவர் தேர் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி, நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நம்ம ஊர்களில் கோயில் திருவிழாக்களின் போது எப்போதும் தேர்த் திருவிழாக்கள் நடக்கும். இந்த தேரை இழுக்க அண்டை ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவது வழக்கம். கோலாகலமாக நடக்கும் இதுபோன்ற திருவிழாக்கள் கொண்டாட்டமாகவே இருக்கும்.

இருப்பினும், சில நேரங்களில் பாதுகாப்பு குறைபாடுகளால் இதுபோன்ற திருவிழாக்களிலும் விபத்துகள் நடக்கும். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நடந்துள்ளது.
உயிரிழந்த சோகம்: அங்கே கொல்லம் அருகே உள்ள புகழ்பெற்ற கொட்டாங்குளங்கரா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடக்கும். அதன்படி இந்தாண்டு நடந்த திருவிழாவின் போது ஐந்து வயது சிறுமி, தேர் சக்கரங்களுக்கு அடியில் நசுங்கி உயிரிழந்தார். உயிரிழந்த அந்த சிறுமி க்ஷேத்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சாவாரா என்ற பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி தனது பெற்றோருடன் கோயிலுக்கு வந்துள்ளார். பக்தர்கள் தேரை இழுத்தபோது எதிர்பாராதவிதமாக அந்த சிறுமி தேரின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கியுள்ளார். இதைப் பார்த்ததும் அருகே இருந்தவர் கூச்சலிட்ட நிலையில், தேரை உடனடியாக நிறுத்தியுள்ளனர். மேலும், அச்சிறுமியைப் பெற்றோர் மற்றும் போலீசார் மீட்டு அவர்கள் உடனடியாக அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் சொல்வது என்ன: இது குறித்து போலீசார் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த சிறுமி பெற்றோருடன் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது தான் எதிர்பாராத விதமாக இந்த கொடூரமான விபத்து நடந்துள்ளது. வழக்கமாகக் குழந்தைகளும் தேரை இழுப்பார்கள். ஆனால், அவர்களைப் பாதுகாப்பு காரணங்களால் தேருக்கு அருகே நிற்க விட மாட்டார்கள்.
ஆனால், இந்த சிறுமி எப்படியே தேருக்கு மிக அருகே சென்று இருக்கிறார். அவர் தவறுதலாக விழுந்தது போலத் தான் தெரிகிறது" என்றார். மேலும், தேர் திருவிழாக்களுக்குக் குழந்தைகளுடன் செல்லும் போது அவர்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படியும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
போலீசார் விசாரணை: தேர் கோயில் அருகே உள்ள திறந்த வெளி மைதானத்தில் நடந்த நிலையில், அங்கே தான் இந்த விபத்தும் நடந்துள்ளது. இதையடுத்து, நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications