ஆசையாக சாக்லேட் சாப்பிட்ட 4 வயது குழந்தை.. மறுநாளே ஐசியுவில் அனுமதி! என்ன நடந்தது? திக்திக் சம்பவம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 4 வயதுக் குழந்தை ஒன்று ஆசையாக சாக்லேட் சாப்பிட்டுள்ளது. இருப்பினும், சாக்லேட் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே குழந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த குழந்தை ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் பல்வேறு உணவு, ஸ்நாக்ஸ், இனிப்பு வகைகள் விற்பனையில் உள்ளன. அவை நல்ல தரத்தில் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும், அதையும் தாண்டி சில நேரங்களில் சில உணவுகளால் பிரச்சினை ஏற்பட்டுவிடுகிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் கேரள மாநிலத்தில் 4 வயதுக் குழந்தைக்கு நேர்ந்தது.
சாக்லேட்
கடந்த மாதம் கேரளாவைச் சேர்ந்த 4 வயது குழந்தை ஒருவன் தனது பள்ளியில் வழக்கம் போல சாக்லேட் சாப்பிட்டுள்ளான். இருப்பினும், சாக்லேட் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே குழந்தைக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தொடர்ந்து உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட ஐசியுவில் வைத்து சிகிச்சை பெறும் அளவுக்கு நிலைமை மோசமாகிப் போய் இருக்கிறது. குழந்தைக்குச் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பென்சோடியாசெபைன்கள் என்ற நச்சு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக கேரள மணற்காடு காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அன்று பள்ளியிலிருந்து திரும்பிய குழந்தைக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிய குழந்தையின் தாய், பள்ளி ஆசிரியைக்கு போன் செய்து என்ன நடந்தது எனக் கேட்டுள்ளார். இன்று பள்ளியில் குழந்தை வழக்கம் போலவே இருந்ததாகக் கூறிய ஆசிரியை, சாக்லேட்களை மட்டுமே கூடுதலாகச் சாப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சிறுநீர் பாதிப்பு
இருப்பினும், கொஞ்ச நேரத்திலேயே குழந்தையின் உடல்நிலை மோசமாகியுள்ளது. குழந்தையை முதலில் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்குச் செய்யப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் depressant இருப்பது தெரிய வந்தது.
போலீஸ் விசாரணை
குழந்தை சாப்பிட்ட சாக்லேட் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என நினைக்கிறோம். இருப்பினும், அது உறுதியாகத் தெரியவில்லை. மேலும், குழந்தைகளிடம் சாக்லேட் எப்படி வந்தது என்பதும் தெரியவில்லை.. அது தொடர்பாக விசாரித்து வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் பள்ளியின் மீது தவறு இருப்பதாகத் தெரியவில்லை. தாத்தாவுடன் வீட்டிற்குச் செல்லும் வரை குழந்தை நலமாக இருந்ததாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சாக்லேட்டின் மற்றொரு பகுதியை வேறு ஒரு குழந்தை சாப்பிட்டுள்ளது. ஆனால், அந்த குழந்தை நலமாகவே இருக்கிறது.
ஐசியுவில் சிகிச்சை
இந்த ஒரு குழந்தைக்கு மட்டுமே திடீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், சில நாட்கள் குழந்தை ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு இருந்தது. இப்போது குழந்தையின் உடல்நிலை சீராகவே உள்ளது. இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
மேலும், குழந்தையின் தாயார் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளார். தனது குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications