அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளதால் 8 மாவட்டங்களுக்கு மழை தொடர்பான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக 8-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு மாநிலத்தின் பல பகுதிகளிலும் தீவிரமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அரபிக்கடலில் உருவான வாயு புயல் காரணமாக ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு மழை பொழிவு குறைந்து போனது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் லேசான சாரல் மழையே கொட்டியது. ஒரு மாதம் கடந்த பிறகு மீண்டும் மழை தீவிரம் அடைந்தது.
இந்த நிலையில் வங்க கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக கேரளாவில் இன்று முதல் 8-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதுபோல கடலிலும் பலத்த காற்று வீசும் என்றும் அலைகள் பல மீட்டர் உயரத்திற்கு எழும்பும் என்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில் மீண்டும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து பேரிடர் மேலாண்மை இயக்கத்தினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.
மேலும், நாளை கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், 6-ந்தேதி பத்தனம் திட்டா, இடுக்கி, மலப்புரம், வயநாடு, காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வருகிற 7-ந்தேதி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.