அத்துமீறிய நடிகர்.. அலறிய நடிகைகள்! முகேஷ் ராஜினாமா தேவையில்லை..மார்க்சிஸ்ட் பகீர்! கொதிக்கும் கேரளா
திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் இயக்குனர்கள் நடிகர்கள் மீதான பாலியல் புகார் விவகாரம் பெரிதாகி இருக்கிறது. இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரையுலகில் பாலியல் புகார் தொடர்பாக மலையாள நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான கொடுமை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இதில் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வல்சலா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகைகள் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் இந்த கமிட்டி விசாரணை நடத்தியது.
தொடர்ந்து 60க்கும் மேற்பட்டோர் திரை உலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகள் புறக்கணிப்புகள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். 2019ஆம் ஆண்டு இந்த குழு தனது அறிக்கையை கேரள முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது. ஆனால் பல ஆண்டுகளாக அது வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் உரிமை ஆணையத்தின் மூலம் இந்த அறிக்கை வெளியானது.
அதில் பல நடிகைகள் பெண் கலைஞர்களுக்கு பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றதாகவும், பாலியல் இச்சைக்கு அழைக்கும் நடிகர்கள் இயக்குனர்களுக்கு ஒத்துழைக்காத நடிகைகள், பெண் தொழில்நுட்ப பணியாளர்கள் மலையாள சினிமாவில் இருந்தே ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதை அடுத்து மலையாள நடிகர்கள் இயக்குனர்கள் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலையாள சினிமா அகடமி தலைவரும் பிரபல இயக்குனருமான ரஞ்சித், தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார் .
அதுமட்டுமல்லாமல் ஒரு நடிகை நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தார். மேலும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்ளிட்ட 4 முக்கிய மலையாள நடிகர்கள் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதை அடுத்து அவருக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவரது வீட்டை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரஸ் மற்றும் மகிளா காங்கிரஸ் கட்சியினர் அவரது வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன் முற்றுகையிட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், முகேஷை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும் முகேஷ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதை அடுத்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ முகேஷ் திரைப்படக் கொள்கை வகுப்பதற்கான கேரளா அரசின் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனிடையே முகேஷ் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் எம்எல்ஏவாக இருக்கும் அவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு இருப்பதால் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குரல் வலுத்திருக்கிறது.
இதற்கிடையே தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என நடிகர் எம்எல்ஏவுமான முகேஷ் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மூன்றாம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. இந்நிலையில் தனது எம்எல்ஏ பதவியை முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
அந்த கட்சியின் மாநில குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளரான கோவிந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில் திரைப்பட தயாரிப்பு கொள்கை குழுவில் இருந்து ஏற்கனவே முகேஷ் நீக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏற்கனவே நாட்டில் உள்ள 16 எம்பிக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் இருக்கிறன. அதற்காக அவர்கள் யாரும் பதவியை ராஜினமா செய்துள்ளார்களா?" என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications