ரம்ஜான்: நரசிம்மர் கோயில் வளாகத்தில் 'சம்பவம்'.. வடஇந்தியாவுக்கு பாடம் எடுத்த கேரளா.. நெகிழ்ச்சி
திருவனந்தபுரம்: கேரளாவில் லட்சுமி நரசிம்மர் கோயில் வளாகத்தில் இப்தார் விருந்து வழங்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீதான மோதல் போக்குகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கடந்த மாதம் இறுதியில் நடந்த ராமநவமி கொண்டாட்டங்கள் வன்முறையில் முடிந்ததாக வந்த செய்திகள் இந்த மோதல் போக்குகளுக்கு உதாரணம் என்று கூறலாம். உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்று இந்து-இஸ்லாமியர் வன்முறை எப்படி உருவாகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. அதாவது மார்ச் 30ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் சிலர் பசு மாடுகளை கொண்றுவிட்டதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன.

புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கிருந்த இறைச்சியை மீட்டனர். மேலும் இஸ்லாமியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அகில இந்து மகா சபை நிர்வாகிகள் சிலர் இஸ்லாமிய இளைஞர்களை வேண்டுமென்றே மாட்டி விட வேண்டும் என்பதற்காக இந்த சதி திட்டத்தை தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அகில இந்து மகா சபை நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
இப்படியாக இஸ்லாமிய சமூகத்தினர் மீது தொடர் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், இரு மதத்தினரிடையே ஒற்றுமையை உருவாக்க கேரளாவில் இந்து கோயில் வளாகத்தில் இப்தார் விருந்து நடைபெற்றுள்ளது. இந்த விருந்துக்கு காரணம் 7 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம்தான். அதாவது மலப்புரம் மாவட்டத்தில் வெட்டிச்சிரா ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம மூர்த்தி விஷ்ணு கோயில் ஒன்று இருக்கிறது. இந்த கோயில் 100 ஆண்டுகள் பழமையானதாகும். இப்படி இருக்கையில் கோயிலின் சில பகுதிகள் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்துள்ளது.
இதனை பார்த்த இந்து மக்கள் தங்கள் கை காசை போட்டு கோயிலை புனரமைக்க முயன்றுள்ளனர். ஆனால் இதனை முழுமையாக சீரமைக்க ரூ.15 லட்சம் வரை செலவாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கோயிலை சுற்றி வெறும் 30 இந்து குடும்பங்கள்தான் இருந்துள்ளனர். எனவே முழு பணத்தையும் திரட்ட முடியாமல் அவர்கள் திணறினார்கள். இப்படி இருக்கையில்தான் கோயிலை சுற்றி இருந்த இஸ்லாமியர்கள் கோயிலை முழுமையான புனரமைக்க உதவி செய்துள்ளனர். அவர்களின் உதவியால் கோயில் மறு உருவம் பெற்றது.
இதனையடுத்து அப்போதிலிருந்து இப்போது வரை இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கோயில் திருவிழாவுக்கு முதல் அழைப்பு இஸ்லாமியர் வீடுகளுக்குதான் செல்லும். முதல் மரியாதையும் அவர்களுக்குதான். அதுபோல ஒவ்வொரு இப்தார் விருந்தும் கோயில் வளாகத்தில்தான் நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் சுவாரசியம் என்னவென்றால் கோயிலின் நிர்வாக கமியிட்டிலும் சில இஸ்லாமியர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்பதுதான். மத நல்லிணக்கத்தில் எப்போதும் தென் மாநிலங்கள்தான் வட மாநிலங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications