நிவின் பாலி முகம்.. உயிரை பணயம் வைத்த வனத்துறை! இந்தியாவை உலுக்கும் வயநாடு போட்டோவின் பின்னணி
திருவனந்தபுரம்: நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டையே ஒரு சம்பவம் உலுக்கி உள்ளது. அது என்னவென்றால் காடு தான் உலகம்.. குகை தான் வீடு.. 21ம் நூற்றாண்டிலும் பழங்களை தின்று கற்கால வாழ்க்கை நடத்திய 4 குழந்தைகள் உள்பட 6 பேர் அடங்கிய ஆதிவாசி குழந்தைகளை மீட்டது தான்..
ஒவ்வொரு பேரிடரிலும் அதன் பெரும் தாக்கத்தை உலகுக்கு உரைக்கும் வகையில் ஏதேனும் ஒரு போட்டோ வைரலாக பரவும். அந்த வகையில் அட்டமெலா வனப்பகுதியில் மலை உச்சியில் உள்ள குகையை வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வந்த ஆதிவாசி குடும்பத்தை வனத்துறை மீட்டது போட்டோ தான் தற்போது ‛டாக் ஆப் தி டவுன்’ ஆக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களாக நாம் இணையத்தில் ஒரு போட்டோவை பார்த்திருப்போம். அதாவது மலையாள நடிகர் நிவின் பாலியின் முகத்தை ஒத்து இருக்கும் இளைஞர் ஒருவர் தனது உடலில் துணியை கட்டி உடல் மெலிந்த சிறுவனை மீட்டு வரும் போட்டோவை நாம் இணையதளத்தில் பார்த்துவிட்டு சகஜமாக கடந்து இருப்போம். ஆனால் அந்த போட்டோவின் பின்னால் இருந்த பெரிய சவாலை நாம் அறிந்திருக்க மாட்டோம். அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்? என்று நீங்கள் கேட்கலாம்.
மொத்தம் 2,093 மிமீட்டராம்.. வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணம்? நடுங்க வைத்த பேய் மழை.. இதோ டேட்டா
உண்மையை நீங்கள் அறிந்தால் நிச்சயம் அந்த வனத்துறை ஊழியர்களை பாராட்டி விட்டு தான் செல்வீர்கள். ஏனென்றால் வயநாட்டில் மலை உச்சியில் மனிதர்களை பாராமல் குகையை வீடாக வைத்து வாழ்ந்த 6 பேர் கொண்ட ஆதிவாசி குடும்பத்தை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த மீட்பு பணி என்பது நாம் நினைப்பது போல் சாதாரணமாக நடந்து விடவில்லை. கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் மேடு, பள்ளம், கூர்மையான பாறைகளை கடந்து 8 மணிநேர தொடர் போராட்டத்திற்கு பிறகு நடந்துள்ளது.

‛கடவுளின் தேசம்’ என அழைக்கப்படும் கேரளா தற்போது பெரும் துயரை சந்தித்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 357 பேர் பலியான நிலையில் 206 பேரின் நிலை என்னவென்றே தெரியாமல் போய் உள்ளது. இன்று 6வது நாளாக மீட்பு பணி என்பது நடந்து வருகிறது. கேரளாவை பொறுத்தவரை இது பெரிய பேரிடர். ஆம், கடந்த மாதம் 30ம் தேதி... வயநாடு மாவட்டம் முண்டக்கரை, சூரல்மலை பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் உழைத்த களைப்பில் ஓய்வெடுத்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.
அய்யோ கடவுளே.. ராணுவத்துக்கே இந்த கதியா? வயநாடு மீட்பு பணியில் வீரர்கள் சந்தித்த பெரும் துயரம்
எப்போதும் இரவு நேரத்தில் குயில், யானை என மிருகங்களின் சத்தம் கேட்கும் இந்த கிராமத்துக்கு அன்று நள்ளிரவு மரண ஓலங்கள் கேட்க தொடங்கியது. விடாமல் பெய்து கொண்டிருந்த மழைக்கு நடுவே சரியாக நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் அடுத்தடுத்து 3 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் மலை முகட்டில் இருந்த முண்டக்கை கிராமம் மொத்தமாக அழிந்து போனது. மலையில் இருந்து பெருக்கெடுத்து வந்த வெள்ளம், உருண்டு வந்த பாறாங்கல்கள், மண் உள்ளிட்டவை முண்டக்கை கிராமத்தை மொத்தமாக மூடியது.

இந்த நிலச்சரிவு முண்டக்கை மட்டுமின்றி சூரல்மலையும் பதம் பார்த்தது. நள்ளிரவு நேரத்தில் அயர்ந்து வீடுகளில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பாறைக்களுக்கு அடியில் சிக்கியதோடு, மண்ணில் புதையுண்டனர். இதுபற்றி கேள்வி பட்டதும், கடந்த 30ம் தேதி காலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், வனத்துறையினர், ராணுவத்தினர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த மீட்பு பணியில் கல்பெட்டா வனச்சரக அதிகாரி ஆஷீப் கெலோத் தலைமையில், வனத்துறையினர் ஜெயச்சந்திரன், அனில் குமார், அனூப் தாமஸ் ஆகிய 4 பேர் ஒரு குழுவாக சேர்ந்து மீட்பு பணியை தொடங்கினர்.
இந்த வனத்துறை குழுவினர் அட்டமெலா வனப்பகுதியில் யாரும் சிக்கி உள்ளார்களா? என்பதை தேட தொடங்கினர். அப்போது தான் அவர்களின் கண்களுக்கு எதிரே ஒரு பெண் நடந்து சென்றார். அவரது கையில் 5 வயது சிறுவன் இருந்தான். அடர்ந்த காடு, கொட்டும் மழை, நிலச்சரிவுக்கு இடையே இந்த பெண், சிறுவனுடன் நடந்து செல்வதை பார்த்து வனத்துறையினர் ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்து போயினர். வனத்துறையினர் அவரை பார்க்க, அந்த பெண் பயந்துப்போனார். சிறுவனின் கண்களிலும் பயம் தெரிந்தது. அருகே சென்ற வனத்துறையினர் அந்த பெண்ணையும், சிறுவனையும் ஆசுவாசப்படுத்தினர். மேலும் அவர்கள் எடுத்து சென்ற பிரட்டை வழங்கி பசியாற்றினர்.
அந்த பெண்ணிடம் வனத்துறையினர் விசாரிக்க தொடங்கினர். அப்போது தான் உண்மை தெரியவந்தது. அந்த ‛‛என் பெயர் சாந்தா. நான் பனியா எனும் பழங்குடியினத்தை சேர்ந்தவள். மலை உச்சியில் உள்ள குகையில் குடும்பத்துடன் இருக்கிறேன். என் கணவர் கிருஷ்ணன். எனக்கு மொத்தம் 4 மகன்கள். என்னுடன் இருக்கும் மகனுக்கு 5 வயது ஆகிறது. என் கணவருடன் ஒரு வயது, 2 வயது மற்றும் 3வயது நிரம்பிய மகன்கள் உள்ளனர். இவர்கள் 4 பேரும் குகையில் இருக்கின்றனர். தொடர்ந்து மலை பெய்வதால் எங்களுக்கு உணவு கிடைக்கவில்லை. ஒரு வாரமாக கனமழை கொட்டுகிறது. காட்டில் உணவு தேட முடியவில்லை. பசி வாட்ட துவங்கியது. இதனால் எனது மூத்த மகனுடன் கீழே இறங்கி ஊருக்குள் வந்தேன். சாப்பிட உணவு ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து வந்தேன்.
ஆனால் நிலச்சரிவு ஏற்பட்டு மொத்த ஊரும் காலியாகி விட்டது. நாங்கள் பிழைத்ததே அதிர்ஷ்டம் தான். குகையில் இருப்பவர்களுக்கு நிலச்சரிவு விஷயம் நிச்சயம் தெரிந்திருக்காது. நான் சாப்பிட எதாவது கொண்டு வருவேன் என்று நம்பி காத்திருப்பார்கள். போகும் போது ஏதாவது கொண்டு செல்ல வேண்டும். இந்நேரம் குகையில் அவர்கள் பசியால் மயங்கி இருக்கக்கூடும். உணவு தந்து என்னை எனது கணவருடன் சேர்த்து வையுங்கள்’’ என கூறினார். இதை கேட்ட வனத்துறையினர் பேரதிர்ச்சி அடைந்தனர்.
அதோடு குகையில் இருக்கும் குடும்பத்தை காப்பாற்ற முடிவு செய்தனர். டாக்டர்களை அழைத்து பழங்குடி பெண்ணுக்கும் குழந்தைக்கும் முதலுதவி அளித்தனர். அவர்களை முகாமில் தங்க வைத்தனர். அதன்பிறகு பெண் கூறிய தகவல்களை பெற்று கொண்டு வனத்துறையினர் குகையில் உள்ள 3 சிறுவர்கள் மற்றும் சாந்தாவின் கணவர் கிருஷ்ணனை மீட்க புறப்பட்டனர். இப்போது தான் பெரும் சவால் காத்திருந்தது. ஏனென்றால் அவர்களின் மீட்பு பணி என்பது நினைத்ததை விட பெரும் சவாலாக இருந்தத. அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத பயணமாக அது அமையும் என்று வனத்துறையினர் நினைக்கவில்லை.
கருப்பு நிற உடை, தலைக்கு தொப்பி அணிந்து வனத்துறையினர் மீட்பு பணியை தொடங்கினர். வனப்பகுதியில் மலையேற தேவையான கயிறு, கம்பளி, சாப்பிட சிறிது உணவும், குடிநீர் கேன்களையும் சுமந்தபடி ஆபரேஷனை தொடங்கினர். மலை முகடு, பள்ளம், ஆறு, கூரிய பாறைகளை கடந்து நான்கரை மணிநேர நடைப்பயணத்துக்கு பிறகு அவர்கள் குகையை அடைந்தனர். காய்ந்த இலைகளுக்கு நடுவே புகை வந்தது.
குகையை எட்டிப்பார்த்தபோது வனத்துறையினர் கண்ட காட்சி கண்களை கலங்க வைத்தது. சாந்தாவின் கணவர் கிருஷ்ணன் ஒரு மூலையில் அப்பாவியாய் உட்கார்ந்து இருந்தார். அவர் அருகே 3 குழந்தைகளும் காட்டில் கிடைத்த பழங்களை தின்றபடி விளையாடி கொண்டிருந்தனர். அவர்களின் உடல் மெலிந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தது. குளிரில் இருந்து தப்ப தீமூட்டியபடி இருந்த கிருஷண்னை வனத்துறையினர் நெருங்கினர். இதுவரை பிற மனிதர்களை கண்டிராத அந்த 3 சிறுவர்களும் தந்தையின் அருகே பயத்தில் பதுங்கினர். அவர்களின் அச்சம் கண்களில் தெரிந்தது.
இந்த வேளையில் வனத்துறையினர் அவர்கள் நால்வரையும் அரவணதை்தனர். இதுவரை மனிதர்களின் அரவணைப்பை அறியாத அவர்கள் 4 பேரும் கண்கலங்கினர். அவர்களுக்கு வனத்துறையினர் எடுத்து சென்ற உணவு, தண்ணீரை கொடுத்தனர். கடந்த 4 நாட்களுக்கும் கனமழையால் உணவின்றி தவித்த அவர்களுக்கு வனத்துறையினர் உணவு வயிறை நிரப்பியது. ஊர் பகுதிக்கு போவோம் என்று கிருஷ்ணனை அழைத்தனர். ஆனால் அவர் மறுத்தார். காட்டை விட்டு வரமாட்டேன் என்று அடம்பிடித்தார். இப்படி அவர் அடம்பிடிப்பார் என்று முன்கூட்டியே அறிந்த வனத்துறையினர் இன்னொரு பிளானை கையில் வைத்திருந்தனர்.
அது என்னவென்றால் பொய்யோடு கூடிய சென்டிமென்ட் பிளான். அதாவது 'உங்கள் மனைவி சாந்தாவுக்கு உடல் நலம் சரி இல்லை. மருத்துவமனையில் உள்ளார். நீங்கள் வர வேண்டும் என்று காத்திருக்கிறார்’ என்றனர். இதை கேட்ட கிருஷ்ணன், ‛‛என் மனைவி நன்றாக இருக்கிறாளா? அவளுக்கு ஒன்றும் ஆகவில்லையே? அவளுக்காக தான் காத்திருக்கிறோம். அவள் எங்கிருக்கிறாள்? என்னை அழைத்து செல்லுங்கள் என தழுதழுத்த குரலில் கூறினார்.
இதையடுத்து வனத்துறையினர் கிருஷ்ணன் மற்றும் 3 சிறுவர்களுடன் குகையில் இருந்து புறப்பட்டனர். வனத்துறையினர் கொண்டு சென்ற போர்வையை மூன்று துண்டுகளாக கிழித்தனர். அதன்பிறகு வன ஊழியர் அனுாப், அனில் தலா ஒரு குழந்தைகளை தூக்கி துண்டை வைத்து தங்களின் மார்பில் கட்டி கொண்டனர். இன்னொரு குழந்தையை கிருஷ்ணன் சுமந்தார். இப்படியாக அடுத்த நான்கரை மணிநேர பயணத்துக்கு பிறகு அவர்கள் முகாமுக்கு வந்தனர். தொடர்ச்சியாக 9 மணிநேரம் போராடி வனத்துறையினர் மலை உச்சியில் குகையில் வாழ்ந்த குடும்பத்தை பத்திரமாக மீட்டுள்ளனர். இதில் ட ஆச்சர்யம் என்னவென்றால், கிருஷ்ணனுடன் இருந்த 3 குழந்தைகளும் இதற்கு முன்பு இந்த உலகத்தை ஒரு முறை கூட பார்த்தது இல்லை. இப்போது தான் அவர்கள் வெளியுலகத்தை பார்த்துள்ளனர்.
இதில் வனத்துறையினர் ஆதிவாசி குழந்தைகளை தூக்கி வரும் போட்டோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது கிருஷ்ணன் - சாந்தா தம்பதி தங்களின் 4 மகன்களுடன் வேட்டை தடுப்பு முகாமில் தங்கி உள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான பொருட்கள், பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்து வருகின்றனர். இப்படி தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆதிவாசி குடும்பத்தை மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இவர்களுக்கு நாமும் ஒரு பாராட்டை தெரிவிப்போம்.












Click it and Unblock the Notifications