அழகிய ‛ஐரிஸ்’.. இந்தியாவின் முதல் ‛ஏஐ’ டீச்சரை அறிமுகம் செய்த கேரளா பள்ளி! எப்படி இருக்குனு பாருங்க
திருவனந்தபுரம்: இந்தியாவில் முதல் முறையாக கேரளா பள்ளியில் செயற்கை நுண்ணறிவான AI எனும் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆசிரியைக்கு ஐரிஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பம் என்பது பேசும் பொருளாக உள்ளது. அதாவது ஏஐ தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள் செய்யும் பணிகளை செய்ய முடியும் என கூறப்படுகிறது.

அதாவது ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதர்களை போல சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும் முடியும். சமீபத்தில் தனியார் செய்தி சேனல் கூட ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தது. இதனால் வரும் காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலைவாய்ப்பை பறிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் இந்தியாவில் முதல் முறையாக ஏஐ தொழில்நுட்பத்தில் பள்ளி ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ‛ஐரிஸ்' (IRIS) என பெயரிடப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி உயர்நிலை பள்ளியில் ரோபோ வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆசிரியை பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதோடு மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறது.
அதோடு மாணவர்களுடன் கைக்கொடுத்து உண்மையான ஆசிரியர் போன்று செயல்பட்டு வருகிறது. இந்த புதிய முயற்சியை பள்ளியின் கடுவாயில் தங்கல் அறக்கட்டளை, மேக்கர்லாப்ஸ் எடுடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கி உள்ளது. இதுதொடர்பான வீடியோவை மேக்கர்லாப்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில் ஏஐ தொழில்நுட்ப ரோபா வடிவிலான டீச்சர் மாணவருடன் கைக்கொடுப்பது போலவும், வகுப்பறையில் நடந்து செல்வது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. அதாவது ரோபாவின் காலுக்கு அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த பதில் ‛‛ஐரிஸ் என்ற ஏஐ ஆசிரியரை உருவாக்கி உள்ளோம். இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியர் ரோபோ இது என்ற பெருமையை பெற்றுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏஐ தொழில்நுட்ப ரோபா ஆசிரியையால் 3 மொழிகளில் பேசவும், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும். மேலும் இன்டெல் ப்ராசசெர் மற்றும் கோப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளதால் இது மாணவர்களின் அதிவேக கற்றலுக்கு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications