சபரிமலையில் 29 நாளில் வந்த வருமானம் இத்தனை கோடியா?.. திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 29 நாட்களில் ரூ. 163.89 கோடி வருமானம் வசூலாகியுள்ளது. 22.67 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் புகழ் வாய்ந்ததாகும். கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டு சபரிமலை மண்டல பூஜை தொடங்கியது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது.

மகரவிளக்கு, மண்டலபூஜை சீசன்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். ஐயப்பனை தரிசிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்டு சபரிமலைக்கு வந்து வழிபடுவது வழக்கம்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இதற்காக சபரிமலை தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூலிகை குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
மழை, குளிர், வெயில் என மாறி மாறி வரும் காலநிலையிலும் பக்தர்கள் வருகை குறைந்தபாடில்லை. தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. கன மழை காரணமாக பக்தர்கள் இரவு நேரத்தில் மலைப் பகுதியில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து தினசரி சராசரியாக 70,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலையில் நவம்பர் 16 ஆம் முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரையிலான கடந்த 29 நாட்களில் ரூ. 163.89 கோடி வசூலாகியுள்ளது. 22.67 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதேபோல, கடந்த ஆண்டை விட 4,51,043 பக்தர்கள் கூடுதலாக சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அரவணை பாயாசம் விற்பனை மூலம் தேவஸ்தானத்துக்கு ரூ.82.67 கோடி வருவாயும், உண்டியல் மூலம் ரூ. 52.27 கோடி வருவாயும் வந்துள்ளது. ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து டிசம்பர் 22 ஆம் தேதி காலை 6 மணிக்குப் புறப்பட்டு டிசம்பர் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும்.
அதேபோல, ஐயப்பனுக்கான தீபாராதனை நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு நடைபெறும். கற்பூர ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications