"நீதியின் முன்பு அனைவரும் சமம் இல்லை!" பலாத்கார வழக்கில் திலீப் விடுதலை.. பாதிக்கப்பட்ட நடிகை வேதனை
திருவனந்தபுரம்: மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த வாரம் ஆறு குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை மவுனம் கலைத்துள்ளார். அதேநேரம் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் மட்டும் விசாரணையில் வேறு விதமாக நடத்தப்பட்டதாகவும் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் இல்லை என்பது போல விசாரணை நடத்தப்பட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017 பிப்ரவரி 17 அன்று இரவு காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் கடந்த வாரம் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடைய ஆறு குற்றவாளிகளுக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.. மேலும், அவர்களுக்குத் தலா ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

நடிகர் திலீப்
முதல் குற்றவாளியான பல்சர் சுனிலுக்கு, ஐடி சட்டத்தின் கீழ் மேலும் ஐந்தாண்டு சிறைத் தண்டனை கூடுதலாக வழங்கப்பட்டது. எனினும், அனைத்துத் தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அதேநேரம் இந்த வழக்கில் 8வது குற்றவாளியான மலையாள நடிகர் திலீப்பை அமர்வு நீதிமன்றம் விடுவித்திருந்தது.
மவுனம் கலைத்த நடிகை
இதற்கிடையே சம்பந்தப்பட்ட அந்த நடிகை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தீர்ப்பு குறித்து மவுனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக அவர், "8 ஆண்டுகள், 9 மாதங்கள், 23 நாட்களுக்குப் பிறகு, ஒரு நீண்ட மற்றும் வேதனையான பயணத்தின் முடிவில் இறுதியாக ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றை நான் கண்டேன். ஆறு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வலியைப் பொய் என்றும் இது பொய்யான வழக்கு எனச் சொன்னவர்கள் உண்மையைப் புரிந்து கொள்வார்கள்.
பொய் தகவல்
முதல் குற்றவாளி எனது தனிப்பட்ட ஓட்டுநர் என்று இன்னுமே சிலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அது முற்றிலும் பொய்.. அவர் எனது ஓட்டுநர் அல்ல.. எனது ஊழியரும் அல்ல, எனக்குத் தெரிந்தவரும் இல்லை. 2016இல் நான் நடித்த ஒரு படத்தில் மட்டும் எனக்கு ஏதோ ஓட்டுநராக இருந்துள்ளார். அந்தச் சமயத்தில் அவரை ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே நேரில் சந்தித்தேன். இந்தச் சம்பவம் நடக்கும் வரை அவரை மீண்டும் சந்தித்தது இல்லை!! தயவுசெய்து தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்துங்கள்.
இந்தத் தீர்ப்பு பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம் என்றாலும், எனக்கு ஆச்சரியம் இல்லை.. 2020ஆம் ஆண்டிலேயே இந்த வழக்கில் ஏதோ சரியில்லை என்பதை நான் உணரத் தொடங்கினேன். குறிப்பிட்ட ஒரு குற்றவாளி தொடர்பான விசாரணை கையாண்ட விதத்தில் மாற்றங்களை அரசுத் தரப்பும் கூட கவனித்தது.
நீதிக்கு முன்பு சமம் இல்லை
விசாரணை நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்பதாலேயே பலமுறை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகினேன். இருப்பினும், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதற்கான கோரிக்கை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. பல ஆண்டு வலி, கண்ணீர் மற்றும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நான் ஒரு வேதனையான உண்மையை உணர்ந்தேன்.. 'இந்த நாட்டில் அனைத்துக் குடிமகனுக்கும் சட்டம் முன் சமமான நீதி கிடைப்பதில்லை என்பதை உணர்ந்தேன். ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரே மாதிரியாகச் செயல்படுவதில்லை என்பதையும் நான் அறிவேன்.
இந்த நீண்ட பயணத்தில் எனக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. தவறான கருத்துக்களையும், பணம் பெற்றுப் பரப்பப்படும் கதைகளையும் கொண்டு என்னைத் தொடர்ந்து தாக்கும் நீங்கள், உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்திற்காக அதைத் தொடரலாம்!" என்று பதிலடி கொடுத்தார்.
பட்டியலிட்ட நடிகை
மேலும், அவர் விசாரணை நீதிமன்றத்தை ஏன் தான் நம்பவில்லை எனச் சொல்லி சில நிகழ்வுகளையும் பட்டியலிட்டுள்ளார். அதில் அவர், "இந்த வழக்கு விசாரணையில் எனது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை.. ஆதாரங்களைக் கையாள்வதில் பெரும் குறைபாடுகள் இருந்தன.. முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்ட மெமரி கார்டு, நீதிமன்றக் காவலில் இருந்தபோது, மூன்று முறை சட்டவிரோதமாக அணுகப்பட்டது.
இரண்டு அரசு வழக்கறிஞர்கள், வழக்குச் சூழல் அரசுத் தரப்புக்கு எதிராக மாறியதைக் காரணம் காட்டி, வழக்கில் இருந்து விலகினர். இந்த நீதிமன்றத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க வேண்டாம் என்று அவர்கள் இருவருமே தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறினர்.. ஏனெனில் அவர்களும் விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக உணர்ந்தனர்..
மெமரி கார்டு
மெமரி கார்டு விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரியும், விசாரணையை அறிக்கை அளிக்கும்படியும் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தேன். இருப்பினும், கடைசி வரை அது எனக்கு வழங்கப்படவில்லை. நான் நேர்மையான விசாரணைக்குப் போராடும்போது, இந்த வழக்கை அதே நீதிபதி தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று குற்றவாளி தரப்பு மனுத் தாக்கல் செய்தது சந்தேகங்களை மேலும் அதிகரிக்கவே செய்தது.
இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்குக் கூட இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை வைத்து கடிதம் எழுதினேன். மேலும், விசாரணையில் என்ன நடக்கிறது என்பதைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விசாரணையைத் திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று நான் நீதிமன்றத்தைக் கோரினேன். இந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications