பச்.. பாஜக அவ்வளவு திட்டத்தோடு களமிறக்கியதே.. கடைசியில் மெட்ரோ மேன் இப்படி முடிவெடுத்துட்டாரே!
திருவனந்தபுரம்; கேரளாவில் பாஜக சார்பாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு கடந்த சட்டசபை தேர்தலை சந்தித்த மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார்.
நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் மெட்ரோவை கொண்டு வந்தவர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன். இந்த நிலையில் மெட்ரோ பணிகள், சர்வீஸ் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர் 88 வயதில் கடந்த வருடம் பாஜகவில் இணைந்தார்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இவர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்து ஒரே வாரத்தில் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
வேட்பாளர்
சரியாக ஒரே வாரத்தில் மெட்ரோ மேன் ஸ்ரீதரனுக்கு இந்த போஸ்டிங் வழங்கப்பட்டது. கட்சியின் தலைவர் சுரேந்திரன் போன்றவர்கள் இருந்த போதும் கூட அவர்களுக்கு பதவி வழங்காமல் மெட்ரோ மேன் ஸ்ரீதரனுக்கு பதவி வழங்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக பெரிய பிளானோடு இவரை களமிறக்கியது.
பிளான்
கேரளாவில் பாஜகவிற்கு என்று மண்ணின் மைந்தன், அதேபோல் காவி சாயம் இல்லாத நபரை களமிறக்க வேண்டும் என்று பாஜக இவரை கொண்டு வந்தது. இவருக்கு 88 வயது ஆனாலும் பாஜக பெரிய அளவில் நம்பிக்கை வைத்து களமிறங்கியது. ஆனால் தேர்தலில் இதெல்லாம் கைகொடுக்கவில்லை.
தோல்வி
தேர்தலில் பாஜக கேரளாவில் படுதோல்வி அடைந்தது. ஒரு இடங்களை கூட வெல்லாமல் பாஜக மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இதையடுத்து மெட்ரோ மேன் ஸ்ரீதரனிடம் இது தொடர்பாக ரிப்போர்ட் கேட்கப்பட்டது. தோல்விக்கான காரணங்களை அடுக்கி அவர் ரிப்போர்ட்டும் அளித்து இருந்தார்.
ரிப்போர்ட்
இந்த நிலையில்தான் பாஜக சார்பாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சட்டசபை தேர்தலை சந்தித்த மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார். அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், கேரளாவில் தேர்தலில் தோல்வி அடைந்தது என்னை எளிமையாக்கியது.
எளிமை
நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் எப்போதுமே அரசியல்வாதி கிடையாது. நான் ஒரு மக்கள் பணியாளர். எனக்கு 89 வயது கடந்துவிட்டது. இனியும் நான் ஓடி ஆடி உழைக்க முடியாது. நான் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். இதனால் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன், என்று ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார். பாஜக இவரை கடந்த வருடம் ஆசையாக களமிறங்கிய நிலையில் இப்போது இவர் ஓய்வு பெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.