ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் ஏழைகளுக்கு ஓணம், கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கேரளாவில், வரும் 9 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு மே மாதம் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
கேரளாவில் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
பாஜக தேர்தல் அறிக்கை
கேரளா சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபின், மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்பட மூத்த தலைவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அதன் முழு விவரம் வருமாறு:
இலவச கேஸ் சிலிண்டர்
* ஏழைகளுக்கு ஓணம், கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
* வீடுகளுக்கு மாதம் 20,000 லிட்டர் வரை இலவச குடிநீர் வழங்கப்படும்.
* வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள (BPL) குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 உணவுப் பாதுகாப்பு அட்டை வழங்கப்படும்.
* ஏழை, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 மதிப்புள்ள 'பக்ஷ்யா ஆரோக்ய சுரக்ஷா அட்டை' தரப்படும். அதை மருந்தகங்கள், மளிகைக் கடைகளில் பயன்படுத்தலாம்.
பென்ஷன் உயர்வு - எய்ம்ஸ் வளாகம்
* மக்களுக்கான நலன்புரி ஓய்வூதியம் (Welfare Pension) ரூ.3,000 ஆக உயர்த்தப்படும்.
* ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்ய யோஜனா (PM-JAY) காப்பீடு திட்டம் கேரளா முழுமைக்கும் விரிவுப்படுத்தப்படும்.
* 'விக்சித் கேரளா' திட்டத்தின் கீழ் ஒரு எய்ம்ஸ் வளாகம் கொண்டு வரப்படும். சாலைகள் மேம்படுத்தப்படும். கொச்சி மெட்ரோவின் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
புதிய மெட்ரோ சேவைகள்
* திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் புதிய மெட்ரோ சேவைகள் அறிமுகம் செய்யப்படும்.
* சபரிமலை உட்பட பிற தேவசம் வாரியங்களை சீரமைத்து பக்தர்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சபரிமலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் கொண்டு வரப்படும்.
* கேரளாவில் தங்கக் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும்.
* முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக, "தமிழகத்தின் நீர்ப் பாசன உரிமைகளுக்கு பாதிப்பு இல்லாமல், கேரளாவின் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் நீர் தேவையை உறுதி செய்ய இரு மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசு பணியாற்றும்.
கேரளாவில் பாஜக நிலை என்ன?
கேரளாவை எடுத்து கொண்டால் கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சிக்கு இருப்பது போல் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை. பாஜக தற்போது படிப்படியாக வளர்ந்து வருகிறது. சமீபத்திய உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது.
இதனால் வரும் சட்டசபை தேர்தலை நம்பிக்கையாக பாஜக எதிர்கொள்கிறது. கேரளா சட்டசபை தேர்தலையொட்டி எந்த கட்சிகளும் இன்னும் தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை. முதல் கட்சியாக இன்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications