கேரளா குண்டு வெடிப்பு பிரார்த்தனை கூடத்தில் என்.ஐ.ஏ.- முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் குண்டு வெடிப்பு நடந்த எர்ணாகுளம் கமளச்சேரி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்ற மையத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடன் மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று ஆலோசனை நடத்தினார்.
கேரளா எர்ணாகுளம் கமளச்சேரியில் ஜெகோவாவின் சாட்சிகள் அல்லது யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ பிரிவினர் பிரார்த்தனை கூட்டத்தை நடத்தி வந்தனர். இந்தக் கூட்டத்தில் 2,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். சிலுவைகள், உருவங்களை ஏற்காத, இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள் என்று நம்புகிற கிறிஸ்தவ பிரிவினர்தான் யெகோவா சாட்சிகள்.

பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு: கமளச்சேரி பிரார்த்தனையின் போது திடீரென பயங்கர சப்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இதனால் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் சிதறி ஓடினர். இந்த குண்டு வெடிப்பு சம்பத்தில் 12 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது உயிரிழந்த 3 பேர் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
டொமினிக் சரண்: இந்த குண்டு வெடிப்புக்கு டொமினிக் மார்ட்டின் என்பவர் பொறுப்பேற்று போலீசில் சரணடைந்தார். இவரும் ஜெகோவா சாட்சிகள் பிரிவைச் சேர்ந்தவர். இந்த பிரிவில் 16 ஆண்டுகள் தாம் இணைந்திருந்ததாகவும் ஜெகோவா சாட்சிகள், தேசதுரோகிகள் என்பதாலும் அவர்களை அழிக்கவே வெடிகுண்டு வைத்ததாகவும் டொமினிக் மார்ட்டின் வாக்குமூலம் கொடுத்தார். தற்போது டொமினிக் மார்ட்டின் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அனைத்து கட்சி கூட்டம்: நாட்டை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து விவாதிக்க கேரளாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் இன்று கூட்டினார். இந்தக் கூட்டத்தில் கேரளாவின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
என்.ஐ.ஏ. விசாரணை: இதனிடையே எர்ணாகுளம் கமளச்சேரி வெடிகுண்டு வெடித்த இடத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (என்.ஐ.ஏ) இன்று நேரில் பார்வையிட்டு விசாரணையை நடத்தினர். இதேபோல தமிழ்நாடு, கேரளா போலீசாரும் இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications