நீங்க ரெட் அலர்ட் தருவதற்குள் நிலச்சரிவே ஆரம்பித்துவிட்டது.. அமித் ஷாவுக்கு பினராயி பதிலடி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 270ஐ கடந்துள்ளது. கேரளாவில் சேரும் சகதியாக மழைநீர் வரலாம் எனவும், மக்கள் உயிரிழக்கக்கூடும் என ஏற்கனவே எச்சரித்து இருந்ததாக மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் அமித் ஷாவின் கருத்துக்களை தான் விரோதமாக எடுத்துக் கொள்ளவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
நேற்று முன் தினம் இரவில் இருந்தே கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வயநாட்டில் உள்ள முண்டகாயம், சூரல்மாலா ஆகிய இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மீது மண், பாறைகள், மரங்கள் ஆகியவை விழுந்தன. இதில் சிக்கி 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் படுகாயங்களுடன் 250க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
அதே நேரத்தில் மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கும் நிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் கனமழை ஏற்படும்.. சேறும் சகதியாக மழைநீர் வரலாம் எனவும், மக்கள் உயிரிழக்கக்கூடும் என ஏற்கனவே எச்சரித்து இருந்ததாக மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.
வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக மாநிலங்கள் அவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,"உலகின் அதிநவீன முன்னெச்சரிக்கை அமைப்புகள் இந்தியாவிடம் இருக்கிறது கேரளாவுக்கு கடந்த 23ஆம் தேதியே கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ஜூலை 26 ஆம் தேதி விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் எனவும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னரே எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக மாறி இருக்காது. ஆனால் நம் இந்திய அரசின் முன்னெச்சரிக்கை அமைப்புகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தயவுசெய்து நான் சொல்வதைக் கேட்க வேண்டும். யாரும் கூச்சலிட வேண்டாம். வானிலை எச்சரிக்கையை படியுங்கள். " எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமித் ஷாவின் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர்,"இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது. 115- 204 மி.மீ மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்திருந்த நிலையில், 48 மணி நேரத்தில் 572 மி.மீ. இது ஆரம்பத்தில் ஐஎம்டி கொடுத்த எச்சரிக்கையை விட அதிகமாக உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து காலை 6 மணிக்கு மட்டுமே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்திய புவியியல் ஆய்வு மையம் ஜூலை 29 அன்று ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பச்சை எச்சரிக்கையை மட்டுமே வெளியிட்டது. இது சிறிய நிலச்சரிவுகள் அல்லது பாறை வெடிப்புகள் மட்டுமே சாத்தியக் கூறுகளுக்காக விடப்படும் எச்சரிக்கை ஆகும். ஜூலை 23 முதல் 29 வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பொறுப்பில் உள்ள மத்திய நீர் ஆணையம், இருவழிஞ்சி புழா, சாலியாறு ஆகிய இரண்டிற்கும் எந்த எச்சரிக்கையும் வெளியிடவில்லை. இந்த உண்மைகளுக்கு முரணான தகவலை மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். அதே நேரத்தில் குற்றம் சாட்டுவதற்கான நேரம் இது அல்ல என்பது எனக்கு தெரியும். மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்களை நான் விரோதமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை" என கூறினார்.












Click it and Unblock the Notifications