வக்ஃபு மசோதாவை ஆதரிக்கும் கேரளா கிறிஸ்தவ பிஷப் கவுன்சில்கள்.. நெருக்கடியில் 2 எம்.பிக்கள்!
திருவனந்தபுரம்: மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு மற்றொரு சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவர்களின் பிஷப் கவுன்சில்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. கேரளா கத்தோலிக்க பிஷப் கவுன்சில் மற்றும் கேரளா கத்தோலிக்க பிஷப் கான்பரென்ஸ் ஆப் இந்தியா ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளதால் இந்தியா கூட்டணியின் இரண்டு எம்பிக்கள் எந்த முடிவு எடுப்பது என தெரியாமல் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றனர்.
வக்பு வாரிய மசோதா, சிறுபான்மையினராகிய இஸ்லாமியருக்கு எதிரானது என்பது இந்தியா கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு. கேரளாவில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரி எம்பிக்கள், முழு வீச்சில் வக்பு வாரிய மசோதாவை எதிர்க்கின்றனர்.

அதேநேரத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த கேரளா கத்தோலிக்க பிஷப் கவுன்சில் மற்றும் கேரளா கத்தோலிக்க பிஷப் கான்பரென்ஸ் ஆப் இந்தியா ஆகியவை மத்திய அரசின் சர்ச்சைக்குரிய இந்த வக்ஃபு வாரிய மசோதாவை ஆதரிக்கின்றன. இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மேலும் வக்ஃபு வாரிய மசோதாவுக்கு ஆதரவாகவே கேரளா எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் பிஷப்புகளின் கவுன்சில்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களோ, கட்சியின் மேலிடம் மசோதாவை கடுமையாக எதிர்ப்பதால் தாங்களும் எதிர்ப்பது என முடிவு எடுத்துள்ளனர். இதே நிலைப்பாட்டையே இடதுசாரி எம்பிக்களும் எடுத்துள்ளனர்.
அதேநேரத்தில் கேரளா காங்கிரஸ் எம்பியான பிரான்சிஸ் ஜார்ஜ் (காங்கிரஸ் கூட்டணி), காங்கிரஸ் எம் ராஜ்யசபா எம்பி ஜோஸ் கே.மணி (இடதுசாரி கூட்டணி) ஆகியோர் மட்டும் வக்ஃபு வாரிய மசோதாவை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற முடிவு எடுக்காமல் நெருக்கடியில் சிக்கி உள்ளனர். கேரளாவில் வக்ஃபு வாரிய சொத்துகள் விவகாரத்தை முன்வைத்து கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அம்மாநில எம்பிக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications