மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசு..டெல்லி போராட்டம்- மாநில அரசுகளுக்கு கேரளா முதல்வர் அழைப்பு!
திருவனந்தபுரம்: நாட்டின் மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து டெல்லியில் பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறும் போராட்டத்தில் பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் பங்கேற்க வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவில் இடதுசாரிகளின் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலம் கேரளாதான்.

கேரளா உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்தியில் ஆளும் அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஏற்கனவே தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டங்களில் உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசுடன் போராடி வருகிறது. மேற்கு வங்கமும் இதேபோல மத்திய அரசுடன் மல்லுக்கட்டி வருகிறது.
மத்திய அரசின் இந்தப் போக்கை கண்டித்து டெல்லியில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கனவே போராட்டம் நடத்தியிருந்தது. இதே பாணியில் கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசும் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 8-ந் தேதி இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நாளில் கேரளா அரசின் போராட்டமும் டெல்லியில் நடத்தப்பட இருக்கிறது. டெல்லி போராட்டத்தில் கேரளா எம்பிக்கள், இடதுசாரி கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் கேரளாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடதுசாரி அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த அழைப்பை நிராகரித்தது.
இதனிடையே பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களுக்கும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில் டெல்லி போராட்டத்தில் அம்மாநில அரசுகளும் இணைந்து பங்கேற்க வேண்டும் என வேண்டுகோளை வைக்க இருக்கிறாராம்.
லோக்சபா தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் டெல்லியில் இடதுசாரிகள் கூட்டணி நடத்தும் போராட்டத்தில் "இந்தியா" கூட்டணி கட்சிகள் ஒட்டுமொத்தமாக பங்கேற்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications