"ரொம்ப கஷ்டமா இருக்கு! நீங்கள்தான் தலையிட வேண்டும்!" பிரதமருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்
திருவனந்தபுரம்: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானக் கட்டணங்கள் அதிகமாக உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்,
கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த 2020 மார்ச் மாதம் பயணிகள் விமானச் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் உள்நாட்டு விமானச் சேவை சில மாதங்களில் தொடங்கப்பட்டது.
சமீபத்தில் தான் சர்வதேச விமானச் சேவையும் தொடங்கப்பட்டது. இதனிடையே விமான எரிபொருள் உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானக் கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டது.

கேரள முதல்வர்
இதனிடையே இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார், இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கொரோனா பெருந்துற்று காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறை, இப்போது தான் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இருந்த போதிலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளுக்கான அதிக விமானக் கட்டணங்கள் காரணமாக இப்போது இத்துறை கடும் சவால்களை எதிர்கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

விமான கட்டணங்கள்
மேலும், பினராயி விஜயன் தனது கடிதத்தில், கேரளாவில் இருந்து முக்கிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான வழித்தடங்களில் கொரோனாவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் விமான கட்டணங்களை ஒப்பிட்டு விளக்கியுள்ளார். கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் கொச்சியில் இருந்து டெல்லிக்கு விமான கட்டணம் ரூ. 4,000 ஆக இருந்தது, அது இப்போது ரூ.10,000 ஆகிவிட்டது. இதேபோல், கொச்சியில் இருந்து துபாய்க்கு ரூ.12,000 ஆக இருந்த டிக்கெட்டின் விலை ரூ.40,000 ஆக உயர்ந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள்
கொச்சியில் இருந்து நியூயார்க்கிற்கு முன்பு ரூ.65,000 ஆக இருந்த டிக்கெட்டின் விலை தற்போது ரூ.1,30,000 ஆக உயர்ந்துள்ளது. பினராயி விஜயன் தனது கடிதத்தில் மேலும், "அதிகமாக இருக்கும் விமானக் கட்டணங்களைக் குறைக்கத் தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தணிக்க உடனடியாக தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா துறை
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த மக்களைக் கொண்ட மாநிலமாகக் கேரளா உள்ளது. நாட்டின் சுற்றுலாத் துறையிலும் கேரளா மாநிலத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. கொரோனா காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறை, இப்போது கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்ததால் மீண்டும் மேம்படத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக விமான கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்,












Click it and Unblock the Notifications