"நீங்க சொல்வதை ஏற்க முடியாது!" ராகுல் முகத்திற்கு நேராக சதீசன் சொன்ன வார்த்தை.. ஸ்டன் ஆன நிர்வாகிகள்
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை வீழ்த்தி காங்கிரஸ் ஒரு கலக்கல் வெற்றியைப் பெற்றது. ஆனால், இன்னுமே கூட முதல்வர் யார் என்பதை இறுதி செய்ய முடியாமல் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி திணறி வருகிறது. இதற்கிடையே காங்கிரஸில் என்ன நடக்கிறது.. முதல்வர் பதவியைத் தேர்வு செய்வதில் குழப்பம் ஏன் என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
கேரள சட்டமன்றத் தேர்தலில் 102 இடங்களைக் கைப்பற்றி பினராயி விஜயனின் எல்.டி.எஃப் அரசை வீட்டுக்கு அனுப்பிய உற்சாகத்தில் இருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி . ஆனால், அந்த வெற்றிக் கொண்டாட்டங்களை விட இப்போது கேரளாவில் அனல் பறப்பது 'யார் அடுத்த முதல்வர்?' என்ற கோஷ்டி மோதல்தான்.

ராகுல் காந்தி
முதல்வர் தேர்வு தொடர்பாக டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பே, ராகுல் காந்தி தனது நம்பிக்கைக்குரிய தளபதியான கே.சி.வேணுகோபாலை தனியாகச் சந்தித்துப் பேசியது, கேரள உள்ளூர் தலைவர்கள் மத்தியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் முதல் சாய்ஸாக வேணுகோபால் இருந்தாலும், அவருக்குப் பெரிய முட்டுக்கட்டையாக நிற்பவர் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன். வேணுகோபாலுக்கு எதிராகத் திருவனந்தபுரம் தெருக்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் குறித்து ராகுல் காந்தி நேரடியாகவே சதீசனிடம் விளக்கம் கேட்டார். அதற்குக் கொஞ்சமும் தயங்காமல், "ஆமாம், வேணுகோபால் முதல்வர் ஆவதை நான் எதிர்க்கிறேன்" என சதீசன் முகத்திற்கு நேராகவே போட்டுடைத்தது டெல்லி மேலிடத்தை அதிர வைத்துள்ளது.
சதீசன்
வேணுகோபால் தனது அகில இந்தியப் பதவியைப் பயன்படுத்தி எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் குழுக்களை உருவாக்குவதாகவும், இது கட்சிக்குத்தான் ஆபத்து என்றும் சதீசன் ஆவேசமாக வாதிட்டுள்ளார். மேலும், வேணுகோபால் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நென்மாரா, கழக்கூட்டம், வடக்காஞ்சேரி, நெடுமங்காடு மற்றும் சேர்த்தலா போன்ற தொகுதிகளில் தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுத்ததால்தான் காங்கிரஸ் இன்னும் கூடுதல் இடங்களை வெல்லும் வாய்ப்பை இழந்தது என்ற கடுமையான குற்றச்சாட்டையும் சதீசன் முன்வைத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராகத் தான் இருந்தபோது அனைவரையும் அரவணைத்துச் சென்றதாகவும், முதல்வர் பதவிக்கு அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவு கொண்ட ஒருவரே வர வேண்டும் என்பதும் அவரது வாதம். சதீசனுக்குப் பக்கபலமாக மற்றொரு சீனியரான ரமேஷ் சென்னிதாலாவும், கூட்டணியின் முக்கிய அங்கமான முஸ்லிம் லீக் கட்சியும் இருப்பதுதான் வேணுகோபாலுக்குப் பெரிய தலைவலி.
கூட்டணிக் கட்சிகள்
கேரளாவைப் பொறுத்தவரை முஸ்லிம் லீக் கட்சியின் 22 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இன்றி யாரும் முதல்வர் நாற்காலியில் அமர முடியாது. அவர்கள் சதீசன் பக்கமே சாய்ந்திருப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸுக்கு 63 இடங்கள் இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளான கேரள காங்கிரஸ் (8) மற்றும் ஆர்.எஸ்.பி (3) ஆகியவையும் சதீசனின் உழைப்பையே அங்கீகரிக்கின்றன. பினராயி விஜயனைத் தேர்தல் களத்தில் வீழ்த்த சதீசன் போட்ட திட்டங்களே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம் என்பது கூட்டணிக் கட்சிகளின் எண்ணம்.
உட்கட்சி மோதல்
களத்தில் பினராயி விஜயனை வீழ்த்திய காங்கிரஸ், இப்போது உள்ளே இருக்கும் கோஷ்டிப் பூசலை வீழ்த்தப் போராடி வருகிறது. ராகுல் காந்திக்குத் தனது டெல்லி நண்பர் வேணுகோபால் வேண்டும்; ஆனால் கேரள காங்கிரஸுக்கோ களத்தில் நின்ற சதீசன் வேண்டும். அதாவது காங்கிரஸில் வழக்கம் போல மக்கள் மற்றும் தொண்டர்கள் நினைக்கும் நபர் ஒருவராகவும் டெல்லி தலைமை நினைக்கும் நபர் வேறு ஒருவராகவும் இருக்கிறது. இதனால் தற்போதைய சூழலில் இந்த மோதல் முடிவுக்கு வராது என்றே தெரிகிறது. கேரளா முதல்வர் யார் என்பது தெளிவாகத் தெரிய இன்னும் ஓரிரு நாட்கள் ஆகலாம் என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications