பாஜகவுக்கு ஜம்ப் ஆகிறார்களா கேரள காங்கிரஸ் தலைவர்கள்.. திடீர் பரபரப்பு
திருவனந்தபுரம்: ஊர் ஊராக காங்கிரஸ் கட்சியை உடைக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது. பச்சையாகவே இதுகுறித்துப் பேசவும் ஆரம்பித்து விட்டனர் பாஜகவினர்.
மேற்கு வங்கத்தில் வளைத்து வளைத்து ஆட்களை இழுக்கின்றனர். குஜராத்திலும் காங்கிரஸ் உடைந்து சரமாரியாக எம்எல்ஏக்கள் பாஜகவுக்குத் தாவிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கேரளாவிலும் பாஜகவுக்கு தாவப் போவதாக சில காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.. அவர்களில் ஒருவர்தான் அப்துல்லா குட்டி. ஆனால், கேரளா மாநில காங்கிரசில் இருந்து யாரும் பாஜகவுக்கு செல்லமாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகிறது. மீண்டும் அந்த இரு இடங்களை தேர்வு செய்ய பாஜகவுக்கு போதுமான பலம் இல்லாததால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இழுக்கும் முயற்சி நடந்து வருவதாக குற்றசாட்டு உள்ளது. அதே போன்று மேற்கு வங்கத்தில் இருந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரும் பாஜகவுக்கு தாவி வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஏபி.அப்துல்லாகுட்டி மோடியைப் பாராட்டி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் 'சமூக சேவகர்கள் ஒரு கொள்கையை உருவாக்கும்போது, அவர்கள் சந்தித்த ஏழை மக்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். அதைச் சரியாகச் செய்துகாட்டியவர் மோடி' என்று எழுதியிருந்தார். இது கேரளாவில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்த ஏபி.அப்துல்லாகுட்டி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பியாக இருந்தபோது குஜராத்தில் மோடியின் வளர்ச்சி திட்டங்களை புகழ்ந்ததால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் காங்கிரசில் இணைந்து எம்.எல்.எ வாக தேர்வானார். ஆனால் கடந்த தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஏபி.அப்துல்லாகுட்டியின் பதிவு கேரள காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆலோசனை செய்து வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில் ''பிரதமர் மோடி காந்திய கொள்கைகளை பின்பற்றுவதாக அப்துல்லா குட்டி கூறியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. அவரிடம் விளக்கம் கோரப்படும். உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அப்துல்லா குட்டி பாஜகவுக்கு செல்வார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு விளக்கமளித்த ரமேஷ் சென்னிதலா கேரளாவில் இருந்து எந்தவொரு முக்கியத் தலைவரும் காங்கிரஸ் கட்சி நிர்வாகியும் பாஜகவுக்குச் செல்ல மாட்டார்கள். அமித் ஷா கேரளாவுக்கு ஏராளமான முறை வந்துசென்றார். தன்னால் முடிந்த அளவு அவர் முயற்சியும் செய்து பார்த்தார். ஆனாலும் இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனது கணக்கைக் கேரளத்தில் தொடங்கமுடியவில்லை' என்றார் சென்னிதாலா.












Click it and Unblock the Notifications