விலை மதிப்புமிக்க இரிடியம்.. கோடிக்கணக்கில் லாபம்.. சினிமா பட பாணியில் மோசடி செய்த கேரள தம்பதி கைது
திருவனந்தபுரம்: சமீபகாலமாக டிசைன் டிசைனாக பண மோசடி என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலீடு என்ற பெயரில் வாடிக்கையாளரை நம்ப வைத்து எப்படி எல்லாம் பண மோசடி செய்கின்றனர். பொதுமக்கள் எப்படி ஏமாற்றப்படுகின்றனர் என்பது குறித்து சதுரங்க வேட்டை என்ற திரைப்படம்கூட எடுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற பிரச்னைகளில் படித்தவர்களும்கூட ஏமாறுகின்றனர் என்பதுதான் இதில் கூடுதல் வியப்பு. அந்தவகையில், தங்களிடம் சோதனை செய்யப்பட்ட இரிடியம் உள்ளதாகவும், இதனை வெளிநாட்டில் விற்றால் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்று கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது நண்பர் கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன். இவர் மூலமாக கோவை இடிகரையைச் சேர்ந்த சியாம் (எ) ஜாய் மோகன் என்பவர் சீனிவாசனுக்கு அறிமுகமாகி உள்ளார். இந்நிலையில், சியாம் மற்றும் அவரது மனைவி சஜிதா ஆகிய இருவரும் தங்களிடம் விலைமதிப்பற்ற பொருளான இரிடியம் உள்ளதாகவும், அதனை வெளிநாட்டில் விற்றால் கோடிக் கணக்கில் லாபம் பெறலாம் என்றும் சீனிவாசனிடம் கூறி அவரது ஆசையைத் தூண்டியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, இந்த இரிடியம் உண்மையானதுதானா என்பதை சோதனை செய்வதற்காக அறிவியல்நுட்பம் தெரிந்த சேகர் என்பவரை சீனிவாசனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர். பின்னர், இரிடியத்தை சோதனை செய்வதற்காக சீனிவாசனிடம் இருந்து 10 லட்சம் ரூபாயை மூவரும் பெற்றுள்ளனர். இதையடுத்து, வருண்பிரசாத் ரெட்டி, ரவீந்திர பிரசாத், அருண்குமார் மற்றும் ஆனந்த வெங்கடேசன் ஆகியோர் சோதனை செய்யப்பட்ட இரிடியம் உண்மையானது என்றும், அதனை வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தில் விற்றால் பல கோடிகள் கிடைக்கும். இதனை தாங்கள் விற்றுக் கொடுப்பதாகக் கூறி, அதற்கு முன் பணமாக சீனிவாசனிடம் இருந்து மேலும் 15 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பணத்தைப் பெற்றுச் சென்றவர்களிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வராமல் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த சீனிவாசன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்பேரில் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர புலன் விசாரணையை போலீஸார் மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலத்தை சேர்ந்த சியாம் (எ) ஜாய் மோகன், சஜிதா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆன்லைன் பண மோசடி, இரிடியம் மோசடி, இரட்டிப்பு லாபம் எனக் கூறி மோசடி செய்வது என பல்வேறு வகைகளில் மோசடி சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பணத்திற்கு ஆசைப்பட்டு எந்தவகையான பிரச்னைகளிலும் சிக்கிக்கொள்ளக் கூடாது. சந்தகேப்படும் வகையில் ஏதேனும் சம்பவம் நடைபெற்றால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications