யானை தந்தங்கள் வைத்திருந்த வழக்கு; மோகன்லால் மீது பாயும் நடவடிக்கை; நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்க பெரும்பாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் மோகன்லால், மாதத்திற்கு ஒரு திரைப்படம் என்று ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியிட்டு எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த 2012ஆம் ஆண்டு வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்றது. அப்போது கொச்சியில் உள்ள மோகன்லால் வீட்டில் இருந்து 4 யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.

தந்தங்கள் பற்றி மோகன்லால்
மோகன்லால் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து நடிகர் மோகன்லாலிடம் வனத்துறை நடத்திய விசாரணையில், யானைத் தந்தங்களை யானை வளர்ப்பவர்களிடம் இருந்து வாங்கினேன் என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து உரிய அனுமதியின்றி யானை தந்தங்களை வீட்டில் வைத்திருப்பது குற்றம் என்பதால், கேரள மாநில வனத்துறை சார்பில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மோகன்லாலுக்கு ஆதரவாக கேரளா அரசு
இந்த வழக்கு தொடர்பாக கேரள அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், மோகன்லால் யானை தந்தங்கள் தொடர்பாக சிறப்பு அனுமதியை பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டதால், வழக்கு முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், போதிய ஆவணங்கள் இல்லாமல், யானை தந்தங்களை மோகன்லால் வைத்திருந்தார். இந்த வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக, கேரள வனத்துறைச் சட்டத்தை மீறியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்
இதனை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. 3 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் யானை தந்தங்கள் தொடர்பான வழக்கில் நடிகர் மோகன்லால் விசாரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நடவடிக்கை எடுக்க உத்தரவு
இந்தநிலையில் பெரும்பாவூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. தொடர்ந்து, இந்த வழக்கில் கேரள அரசின் வாபஸ் மனுவை நிராகரித்து, நடிகர் மோகன்லால் மீது மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. வன விலங்குகளின் பாகங்கள் வைத்திருப்பது தொடர்பான குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications