கேரளாவில் 23 வயது மருத்துவர் கொலை.. போதை ஆசாமி செய்தது என்ன? பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
திருவனந்தபுரம்: கேரளாவில் பெண் மருத்துவர் ஒருவர் போதைக்கு அடிமையான ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
Recommended Video
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் 23 வயதான வந்தனா தாஸ் என்பவர் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் அதிகாலை மருத்துவ பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது சந்தீப் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக கூறி சிகிச்சைக்காக அவரை காவல் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சந்தீப்புக்கு குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையால் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு மருத்துவர் வந்தனா சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆவேசமாக எழுந்த சந்தீப் திடீரென ரகளையில் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து அங்கிருந்தவர்களை எல்லாம் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் மருத்துவர் வந்தனா காவல் துறையினர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
சந்தீப்பால் தாக்கப்பட்ட வந்தனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்ற உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரின் உயிரிழப்பு குறித்து பல தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்திய சந்தீப் போதையில் இருந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் மருத்துவரின் உயிரிழப்புக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என கூறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வந்தனாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. வந்தனாவின் உடலில் 11 காயங்கள் உள்ளன. தலையில் மூன்று முறையும் முதுகில் 6 முறையும் கத்தியால் குத்தியிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. இந்த சம்பவம் கேரளாவையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தை கேரள ஐகோர்ட்டு தானாக முன் வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன், கவுசர் எடப்பகத் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வு, நடந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இத்தகைய சம்பவங்களைக் கையாள்வதற்கு போலீஸார் பயிற்சி பெற்றிருக்கும்,போது, பெண்களை, குழந்தைகளை பாதுகாப்பார்கள் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் ஒரு இளம் டாக்டரை பாதுகாக்க போலீசார் தவறிவிட்டனர். நடந்த சம்பவம் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் ஒருவிதமான ''பய மனநோயை'' (பியர் சைக்கோசிஸ்) ஏற்படுத்தி உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளை ஏன் மூடக் கூடாது? இந்தச் சம்பவத்தால் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டிருப்பதற்கு நீங்கள் (அரசு) என்ன சொல்லப் போகிறீர்கள்? டாக்டர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரமுடியாது என்றால் ஆஸ்பத்திரிகளை அரசு ஏன் இழுத்து மூடக்கூடாது? இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications