திடீரென கேட்ட பயங்கர சத்தம்.. சபரிமலை கோயிலில் வெடி விபத்து.. மூன்று பேர் படுகாயம்!
திருவனந்தபுரம்: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெடி மருந்து நிரப்பும் இடத்தில் இன்று எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மூன்று ஊழியர்கள் படுகாயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இப்போது பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சபரிமலை கோயிலில் இப்போது மண்டல, மகர விளக்குப் பூஜை விழா நடந்து வருகிறது.

இதற்காகச் சபரிமலை கோயிலில் கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் பக்தர்கள் பெரியளவில்லை இல்லை,
இந்தாண்டு கொரோனா கிட்டதட்ட முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், பக்தர்கள் பலரும் மண்டல பூஜை முன்னிட்டு குவிந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் அங்குப் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அதேபோல அங்கு ஒவ்வொரு ஆண்டும் வெடி வழிபாட்டு நடைபெறுவது வழக்கம். இதற்காக அங்கு வெடிமருந்து நிரப்பும் மையமும் உள்ளது.
இன்றைய தினம் சபரிமலையில் உள்ள வெடிமருந்து நிரப்பும் மையத்தில் வழக்கம் போல வெடி மருந்து நிரப்பும் பணிகள் ஏற்பட்டது. மாளிகைபுரம் அருகே உள்ள இந்த மையத்தில் இன்று மாலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு வெடிமருந்து நிரம்பும்போது சிறு வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக நீரைப் பாய்ச்சி தீயை முழுமையாக அணைத்தனர்.
இந்த விபத்தில் அங்கு பணியாற்றி வந்த மூன்று ஊழியர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக கோட்டயாம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் தொடர்புடையவர்கள் ராஜேஷ், அமல், ஜெயக்குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த ஒருவருக்கு 60% தீக்காயமும் மற்ற இருவருக்கு 40% தீக்காயமும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் பக்தர்கள் அதிகம் வரும் பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த விபத்தால் அங்கு சற்று நேரம் பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications