கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பெங்களூரில் காலமானார்! 12 முறை எம்எல்ஏ எனும் பெருமைக்குரியவர்!
திருவனந்தபுரம்: கேரளா மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி (வயது 79) பெங்களூரில் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை 4.25 மணிக்கு காலமானார்.
கேரளா மாநிலத்தின் காங்கிரஸ் முகமாக திகழ்ந்தவர் உம்மன் சாண்டி. மாணவர் பருவத்தில் இருந்தே அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருந்தார். 1970-ம் ஆண்டு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவரானார் உம்மன் சாண்டி.

கேரளா மாநில சட்டசபையின் மிக மூத்த எம்.எல்.ஏ. என்ற பெருமையைப் பெற்றவர். கேரளா சட்டசபைக்கு 1971-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 12 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உம்மன் சாண்டி. புதுப்பள்ளி சட்டசபை தொகுதியை அவர் தமது கோட்டையாக தக்க வைத்திருந்தார்.
கேரளா அரசில் உள்துறை, நிதித்துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களின் அமைச்சராக பதவி வகித்தவர். கேரளா மாநில முதல்வராக 2 முறை பதவி வகித்தார். கேரளாவில் நீண்டகாலம் முதல்வராக இருந்தவர்களில் உம்மன் சாண்டிக்கு 4-வது இடம். கேரளா முதல்வராக மொத்தம் 2,459 நாட்கள் பதவி வகித்தார். 2004-2006; 2011-2016 ஆண்டுகளில் கேரளா முதல்வராக இருந்தார் உம்மன் சாண்டி.
கடந்த 2019-ம் ஆண்டு முதலே உம்மன் சாண்டி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றார். புற்றுநோய் பாதிப்புக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெர்மனியில் சிகிச்சை பெற்றார். திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல்நலன் மிகவும் பாதிப்படைந்தது. இதனையடுத்தே கர்நாடகா மாநிலம் பெங்களூரு மருத்துவமனைக்கு உம்மன் சாண்டி கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு உம்மன் சாண்டி, பெங்களூர் மருத்துவமனையிலேயே காலமானார். உம்மன் சாண்டியின் மறைவு கேரளா காங்கிரஸுக்கு மிகப் பெரும் இழப்பாகும்.
பெங்களூரில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்காக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் 26 கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முகாமிட்டுள்ளனர். பெங்களூரில் நேற்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இன்றும் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications