கேரள தங்க கடத்தல் வழக்கு... ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீது.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!
திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீது அமலாக்கத்துறையினர் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
முன்னதாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 3 முக்கிய குற்றவாளிகளிடம் இருந்து பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 1.85 கோடி ரூபாயை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித்குமார் முதலில் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் இந்தவழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
பின்பு இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாாள் ஊழியர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிந்து வந்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வரின் பினராயி விஜயனின் தனிப்பிரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை என்ஐஏவும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக விசாரித்து வந்தனர்.
அதன்பின்னர் அமலாக்கத்துறையினர் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் சிவசங்கர் கைது செய்யப்பட்டார்.
"இந்துக்களை சாதியாக பிரித்தவர் கிருஷ்ண பகவான்".. கிறிஸ்துமஸ் விழாவில் திருமா. சர்ச்சை பேச்சு
தொடர்ந்து அவரை கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறையினர் பல நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீது அமலாக்கத்துறையினர் பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த தங்க கடத்தல் வழக்கில் சிவசங்கருக்கு தொடர்பு உள்ளதாகவும், தங்க கடத்தல் கும்பலுக்கு அவர் தெரிந்தே உதவி செய்துள்ளார் எனவும் அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் பி.எஸ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரின் கணக்குகளில் இருந்து 1.85 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.