வயநாடு நிலச்சரிவு.. பாரம்பரிய ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்த கேரள அரசு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள மாநில மக்களை புரட்டிப்போட்டுள்ளது வயநாடு நிலச்சரிவு சம்பவம். நூற்றுக்கணக்கானோர் தங்களது உயிரையும், ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவுகள், வீடுகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது.
வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவினர்கள், வீடு, உடமைகள் என அனைத்தையும் இழந்தனர்.

வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மாநில மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் பாரம்பரியப் பண்டிகையான ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்து கேரள சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் கூறுகையில், நிலச்சரிவில் காணமல் போனவர்களைத் தேடும் பணி மற்றும் நிலச்சரிவில் உயிர்பிழைத்த, பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
மாவட்டங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் திட்டமிடப்பட்டிருந்த ஓணம் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறாது. அதேபோல, சாம்பியன்ஸ் படகு லீக் போட்டி நடத்துவதையும் அரசு கைவிட்டுள்ளது. மக்கள் தங்களது வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடலாம் என்றும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி நடத்தப்படவிருந்த நேரு டிராபி படகுப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை எப்படி பாரம்பரியம் சார்ந்த நிகழ்வாக இருக்கிறதோ, அதேபோலத்தான் கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணமும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மக்களைக் காணவரும் மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்பதற்காக ஜாதி மத வேறுபாடின்றி அனைவரது வீடுகளிலும் வண்ணப் பூக்களாலான அத்தப்பூ கோலமிடுவது வழக்கம். அதேபோல, அடை, அவியல், அடைப்பிரதமன், பால் பாயாசம், சாதம், பருப்பு, நெய், காலன், ஓலன், தோரன், கூட்டு, பச்சடி, எரிசேரி, இஞ்சிப்புளி, சாம்பார், ரசம், அப்பளம் என விருந்துப் பட்டியலும் ஒவ்வொருவரது வீட்டிலும் நீண்டுகொண்டே போகும்.
10 நாட்கள் விடுமுறை, போனஸ் என ஊரே சீரும் சிறப்புமாக ஓணத்தைக் கொண்டாடி வந்த நிலையில், இந்த ஆண்டு வயநாடு நிலச்சரிவு சம்பவம் அம்மாநிலத்தையே புரட்டிப்போட்டுள்ளது. எனவே, பாரம்பரிய பண்டிகையான ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications