நாட்டிலேயே முதல்முறையாக கேரளா அரசு சூப்பர் உத்தரவு.. பெண்களுக்கு மகப்பேறு விடுப்பில் அதிரடி சலுகை
திருவனந்தபுரம்: தனியார் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு சம்பளத்துடன் ஆறு மாத மகப்பேறு விடுப்பு வழங்கும் முறை இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் அமலுக்கு வந்துள்ளது.
அரசு அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி புரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் 6மாத கால பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது.

ஆனால் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் சிகிச்சை உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் கேரளாவில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதை பரிசீலனை செய்த கேரளா அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி கேரள அரசு வெளியிட்ட அறிவிப்பில், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளத்துடன் பேறு கால விடுப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மகபேறு விடுப்பு எடுக்கும் பெண்களுக்கு 6 மாதம் சம்பளத்துடன் விடுமுறை மற்றும் சிகிச்சைக்காக ரூ.3500 ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். இதன் மூலம் நாட்டிலேயே முதல்முறையாக தனியார் கல்வி நிறுவன ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு அளித்து அசத்தி உள்ளது கேரளா.












Click it and Unblock the Notifications