"ஆளுநர் ஒன்றும் முதலாளி இல்லை.." கேரள அரசு புத்தகத்தால் விவாதம்! கவர்னரை வம்பிழுக்கும் பினராயி விஜயன்?
திருவனந்தபுரம்: இப்போது எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே கேரளாவில் வெளியிடப்பட்டுள்ள மாநில பாடத்திட்டப் புத்தகத்தில், ஆளுநர் என்பவர் முதல்வர் இல்லை என்றும் முதல்வர் தலைமையிலான மாநில அமைச்சரவையிடமே அதிகாரங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அம்மாநிலக் கல்வித்துறை அமைச்சரும் இது தொடர்பாகச் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் பல்வேறு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களிலும் மாநில அரசுகளுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்புமே மாறி மாறி விமர்சனம் செய்வதைப் பரவலாகவே பார்க்க முடிகிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் எனப் பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலை தான் இருக்கிறது. இதற்கிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, ஆளுநருடனான மோதலில் ஒரு புதிய அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது.

மோதல் போக்கு
அண்டை மாநிலமான கேரளாவில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் பல கலாமாகவே மோதல் போக்கு தான் நிலவுகிறது. தற்போதைய ஆளுநர் ராஜேந்திர அர்லேகருடனும் சரி, முன்பு ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமது கானுடனும் சரி, மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இதற்கிடையே கேரள அரசு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் சோஷியல் சயின்ஸ் பாடத்தில் உள்ள சில கருத்துகளே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.. அதில் ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் குறித்து ஒரு யூனிட் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் ஆளுநர் என்பவர் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத "பெயரளவிலான தலைவர்" (nominal figure) என்றும், உண்மையான அதிகாரம் முதலமைச்சர் தலைமையிலான மாநில அமைச்சரவையிடமே உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் குறித்த பாடல்
ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த பாடங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று முன்பே கேரளக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஜனநாயகம்: ஓர் இந்திய அனுபவம்' ('Democracy: An Indian Experience') என்ற தலைப்பில் இந்த புதிய யூனிட்டில் 4 பக்கங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆளுநர் முதலாளி இல்லை
ஆளுநர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நபரல்ல என்றும், மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர் என்றும் குறிப்பிடுகிறது. மேலும், களத்தில் இருக்கும் அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது என்ற சர்க்காரியா கமிஷனின் பரிந்துரையையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஆளுநர் என்பது ஒரு மாநிலத்தின் பாஸ் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களில் ஆளுநர்களுக்கு இருக்கும் அதிகாரம் குறித்து நாடு முழுக்க விவாதம் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்திலும் கூட இது தொடர்பான வழக்குகள் நடந்து வருகிறது. அது தொடர்பாகவும் கூட இந்தப் பாடத்தில் சில கருத்துகள் இடம்பெற்று இருக்கிறது. அதில் மாநில சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்கள் தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆப்ஷன் மட்டுமே இருக்கு
மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். திருப்பி அனுப்பப்பட்ட மசோதா மீண்டும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே அரசியலமைப்பைக் காப்பாற்ற நினைக்கும் அனைவரும் இதை வாசிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications