நடிகை லட்சுமி மேனனை செப்.17 வரை கைது செய்ய தடை.. முன் ஜாமீன் வழங்கியது கேரளா ஐகோர்ட்!
திருவனந்தபுரம்: ஐடி ஊழியரை காரில் கடத்திச் சென்று தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கி உள்ளது கேரள உயர்நீதிமன்றம். செப்டம்பர் 17 ஆம் தேதி வரை அவரை கைது செய்ய ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் ஐ.டி ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மற்றும் மூன்று பேர் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி மேனனை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொச்சியில் உள்ள ஒரு பாரில் லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனனுடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை காரில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் கிடைத்துள்ளன. நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு காரை நடு ரோட்டில் நிறுத்தி அந்த காரில் உள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டவரை காரில் இருந்து இழுத்துச் சென்று தங்கள் காரில் ஏற்று கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்டு காருக்குள் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனன் மற்றும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடத்தல், அடித்து சித்ரவதை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட மிதுன், அனீஷ் மற்றும் சோனா மோல் ஆகிய மூன்று பேர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை லட்சுமி மேனனையும் கைது செய்ய போலீசார் முயன்ற நிலையில், செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி மேனனை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்நிலையில், லட்சுமி மேனன், கேரளா ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். தாக்குதல் வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்பதால் தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரி இருந்தார்.
இந்நிலையில், ஐடி ஊழியரை காரில் கடத்திச் சென்று தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கி உள்ளது கேரள உயர்நீதிமன்றம். செப்டம்பர் 17 ஆம் தேதி வரை அவரை கைது செய்ய கேரளா ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை லட்சுமி மேனன் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ச்சியாக கொம்பன், வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் பெரிதாக வாய்ப்புகள் இன்றி இருந்து வந்தார்.












Click it and Unblock the Notifications