கோயிலில் ஆர்எஸ்எஸ் ஆயுத பயிற்சி.. குட்கா போட்டு நாறடிக்குறாங்க! கேரள பக்தர்கள் ஹைகோர்டில் வழக்கு
திருவனந்தபுரம்: கேரளாவில் இந்து கோயில்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆயுதப் பயிற்சி செய்வதாகவும், புகையிலை பொருட்களை அதிகளவில் பயன்படுத்துவதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் பக்தர்கள் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.
கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்து கோயில்களில் கூட்டங்களை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களையும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்று பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் கோயில்களில் இனி ஆர்எஸ்எஸ் கூட்டங்களை நடத்தக்கூடாது என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு உத்தரவிட்டது.

இதனை மீறினால் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தது. ஆனால், அதையும் மீறி ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கோயில் வளாகங்களில் ஆயுத பயிற்சிகளை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கோயில்களில் ஆயுத பயிற்சி எடுப்பதாக கூறி பக்தர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்கள்.
அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் திருவனந்தபுரம் சிரயின்கீழுவில் உள்ள ஸ்ரீ சராகரா தேவி கோயில் வளாகத்தை ஆக்கிரமித்து ஆயுத பயிற்சிகளையும், உடற் பயிற்சிகளையும் வழங்கி வருவதாக குற்றம்சாட்டி உள்ளனர். வாரத்தின் அனைத்து நாட்களிலும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இத்தகைய பயிற்சிகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
2 பக்தர்கள் தாக்கல் செய்து இருக்கும் அந்த மனுவில், அரசின் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தடையை மீறி இந்த பயிற்சி நடத்தப்படுவதாக குற்றம்சாட்டி இருக்கிறார்கள். கோயிலில் ஆர்.எஸ்.எஸ். நடத்தி வரும் ஆயுத பயிற்சிகளால் பக்தர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டு உள்ளனர். கோயிலுலுக்கு வரும் யாத்திரிகர்களுக்கும், பக்தர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வேதனையும், துன்புறுத்தலும் தருவதாக அவர்கள் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.
குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் இந்த பயிற்சி காரணமாக கோயிலுக்கு வரும்போது பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அமைதியாக இருக்க வேண்டிய கோயில்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முழக்கங்களை எழுப்பி சத்தமுடுவதாகவும், அமைதியான சூழலை அவர்கள் கெடுப்பதாக தெரிவித்து உள்ளனர்.
அமைதிக்காக வேண்டி கோயிலுக்கு தியானம் செய்ய வரும் பக்தர்கள், ஆர்.எஸ்.எஸ். பயிற்சியால் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும், அமைதியான சூழலை இழப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டு உள்ள பகதர்கள், ஹான்ஸ், பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்தி கோயில் வளாகத்தில் அசுத்தப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்கள்.
இது தொடர்பாக கோயில் நிர்வாகியிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்து உள்ளனர். வழிபடும் உரிமை சட்டத்தின் கீழ் தாங்கள் அமைதியாக கோயிலில் வழிபடுவதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ். ஆயுத பயிற்சியை தடுத்து நிறுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக்கொண்டு உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications