ஆட்டுக்கறிபோல் கூறுபோட்ட அரக்கர்கள்.. மனித உறுப்புகளை புதைத்து மஞ்சள் செடி நடவு! கேரள நரபலி பயங்கரம்
திருவனந்தபுரம்: கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கொல்லப்பட்ட பெண்ணை பல துண்டுகளாக வெட்டி குழியில் போட்டு புதைத்து அதன் மேல் மஞ்சள் செடிகளை நட்டது தெரிய வந்துள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ரயில்நிலையத்தில் பத்மா மற்றும் ரோஸ்லி ஆகியோர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்து இருக்கிறார்கள். இதில் பத்மா தருமபுரியை சேர்ந்த தமிழ் பெண். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பத்மா திடீரென மாயமாகி இருக்கிறார்.
கடந்த ஆகஸ்டு மாதம் அவரது தோழி ரோஸ்லியும் காணாமல் போனார். இது அப்பகுதியில் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸ் விசாரணை
காணாமல்போன இரண்டு பெண்களின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரித்தபோது அவர்கள் முகமது ஷாபி என்ற நபரிடம் பேசி வந்தது தெரியவந்தது. இந்த இரண்டு பெண்களும் முகமது சாபி என்ற இளைஞரிடம் பேசியது பின்னர் சிசிடிவி கேமராக்கள் மூலமும் உறுதி செய்யப்பட்டது. சாபியை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில்தான் அதிரவைக்கும் தகவல் கிடைத்தது.

வாக்குமூலம்
பகவான் சிங் மற்றும் லைலா ஆகிய தம்பதிக்காக 2 பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட தம்பதியின் வீட்டிற்கு அருகில்தான் பத்மாவின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடைத்தது. ரோஸ்லி உடல் எரிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் நரபலி கொடுக்கப்பட்டது எப்படி என்ற விளக்கத்தையும் சாபி போலீசாரிடம் அளித்திருக்கிறார்.

போலீஸ் விளக்கம்
தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், சாபியை சைக்கோ என்றும் பாலியல் ஈடுபாடு அதிகம் உடையவர் என்றும் கூறியுள்ளனர். கொல்லப்பட்ட 2 பெண்களின் அந்தரங்க உறுப்புகளும் கத்தியால் குத்தப்பட்டு அவர்களின் கழுத்து அறுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து இருக்கிறார். பகவான் சிங்கின் மனைவி கொல்லப்பட்ட பெண்ணின் சதையை சாப்பிட்டேன் என்று கூறியதாக கொச்சி காவல் ஆணையர் நாகராஜு தெரிவித்துள்ளார்.

மஞ்சள் செடி வளர்ப்பு
இந்த நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே பத்மாவின் உடலை ஆட்டுக்கறிபோல் கூறுபோட்டு அதன் மீது உப்பை தூவிய அரக்கர்கள், குழியில் போட்டு புதைத்து இருந்ததாகவும், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் மஞ்சள் செடிகளை அதன் மீது நட்டதாகவும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications