தெலுங்கானாவை தொடர்ந்து கேரளா உள்ளாட்சி தேர்தலில் அமோக அறுவடைக்கு தயாராகும் பாஜக!
திருவனந்தபுரம்: தெலுங்கானாவின் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் அபார வெற்றியை பெற்றது போல கேரளாவின் உள்ளாட்சி தேர்தல்களிலும் வெற்றி கொடி நாட்டுவதில் பாஜக மும்முரமாக உள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் 48 இடங்களில் வென்று அசரவைத்தது பாஜக. இத்தனைக்கும் 2016 ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 4 இடங்களில்தான் வென்றது பாஜக.
இம்முறை தனித்தே போட்டியிட்டு 2வது பெரிய கட்சியாக விஸ்வரூபம் எடுத்துவிட்டது பாஜக. இதேஜோருடன் கேரளா உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற்றுவிடும் முனைப்பில் பாஜக உள்ளது.

கேரளா உள்ளாட்சி தேர்தல்
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்கள் நாளை முதல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. 941 கிராம பஞ்சாயத்துகளில் 15,962 வார்டுகள், 152 வட்டார பஞ்சாயத்துகளில் 2,080 இடங்கள், 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 331 இடங்கள், 86 நகராட்சிகளில் 3078 வார்டுகள், 6 மாநகராட்சிகளில் 441 வார்டுகளுக்கு டிச.8, 10 மற்றும் 14 என தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 16-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிகப்படும்.

டெல்லி தலைவர்கள் இல்லை
இந்த முறை கேரளா உள்ளாட்சி தேர்தலில் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகளின் டெல்லி தலைவர்கள் பிரசாரத்துக்கு வரவில்லை. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தனர். கேரளா உள்ளாட்சி தேர்தலில் பாஜக மாநில தலைவர் சுரேந்திரன், முன்னாள் தலைவர் கும்மனம் ராஜசேகரன் ஆகியோர் மட்டுமே தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்
வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி இருந்த போதும் இம்முறை தேர்தல் பிரசாரத்துக்கு அவர் வரவில்லை. முதல்வர் பினராயி விஜயனும் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு போகவில்லை. உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் வேட்பாளர்களாக பாஜக நிறுத்தி உள்ளது. முத்தலாக் சட்டம், பெண்கள் திருமண வயது உயர்த்துவது ஆகியவை இஸ்லாமிய பெண்களிடம் பாஜகவுக்கு பெரும் ஆதரவை பெற்று தந்துள்ளதாக நம்புகின்றனர் அந்த கட்சித் தலைவர்கள்.

பாஜக முனைப்பு
ஆளும் இடதுசாரி அரசு மீதான தங்கக் கடத்தல் வழக்கு அதிருப்தி அலையை உருவாக்கும் என்பதும் பாஜகவின் நம்பிக்கை. தெலுங்கானாவை போல கேரளாவிலும் வெற்றி கொடி பறக்கவிட வேண்டும் என்ற பேராசையில் இருக்கிறது பாஜக.

2010, 2015 தேர்தல் முடிவுகள்
கேரளாவில் 2010 உள்ளாட்சித் தேர்தலில் 941 ஊராட்சிகளுக்கான தேர்தலில் 14-ல்தான் பாஜக வென்றது. வட்டார பஞ்சாயத்துகளில் 1 இடத்தில் மட்டும் வென்றது பாஜக. 2015-ல் இந்த நிலைமையை தலைகீழாக்கியது பாஜக. திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் 34 இடங்களை கைப்பற்றியது பாஜக. 6 நகராட்சி, 1 மாநகராட்சியில் பாஜக எதிர்க்கட்சியானது; 86 நகராட்சிகளில் பாலக்காடு நகராட்சியை பாஜக கைப்பற்றியது. கோழிக்கோடு மாநகராட்சியில் 7, கொச்சியில் 2, கொல்லத்தில் 2, திரிசூரில் 6 இடங்களில் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications