காங்கிரஸை தூக்கி நிறுத்திய.. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்! கேரளாவில் 'கை' உயர காரணம் இதுதான்!
திருவனந்தபுரம்: கேரளாவின் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸின் கை ஓங்கியிருக்கிறது. கடந்த 2020 தேர்தலை விட காங்கிரஸ் இந்த முறை அதிகமான இடங்களை வென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை வீழ்த்தியுள்ளது. இதற்கு காரணம் என்ன? என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2010ல் காங்கிரஸ் கூட்டணி 539 கிராம பஞ்சாயத்துகளை வென்ற போதும், இடதுசாரி கூட்டணி 322ஐப் பெற்றபோதும் கூட, ஆளும் அரசுக்கு எதிராக இத்தகைய வாக்காளர் மாற்றத்தை கேரளா கண்டதில்லை. ஆனால் இந்த முறை நடந்த மாற்றம் எண்ணிக்கையில் மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் முக்கியமானது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வெற்றி யாருக்கு?
அதாவது இந்த வெற்றி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வாக்காளர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக முழுமையாக அணி திரண்டதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த 2020ல் காங்கிரஸ் கூட்டணி வெறும் 3 மாவட்ட பஞ்சாயத்துகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், தற்போது 7 மாவட்ட பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
மாநகராட்சியை பொறுத்தவரை, கடந்த தேர்தலில் ஒரு மாநகராட்சியை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இந்த முறை 4-ஐ கைப்பற்றியிருக்கிறது. கிராம பஞ்சாயத்துகளை பொறுத்தவரை 505 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இடது முன்னணி 341 கிராம பஞ்சாயத்துகளை மட்டுமே வென்றுள்ளது.
தோல்வியடைந்த இடது முன்னணி
இடது முன்னணி சரிவு வியப்பளிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கோழிக்கோடு மாநகராட்சியை தவிர வேறு எதிலும் இடது முன்னணி வெற்றிப்பெறவில்லை. இந்த தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் சில பிரிவினரைத் தன் பக்கம் ஈர்க்க, இடது முன்னணி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதே சமயம், கிறிஸ்தவர்களிடையே செல்வாக்கைப் பெற பாஜக மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன. எனவே சிறுபான்மை வாக்காளர்கள் பிளவுபடாமல், காங்கிரஸ் கூட்டணியின் பின்னால் அணி திரண்டன.
காங்கிரஸ் கூட்டணி வெற்றி
பாஜகவை பொறுத்த அளவில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. மற்றபடி, கேரளாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி இல்லை. திருச்சூரில் கடந்த 2024 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். எனவே திருச்சூரில் இந்தமுறை சுரேஷ் கோபி அலை வீசும் என்று பாஜக நம்பி இருந்தது. ஆனால், அப்படி எந்த அலையும் வீசவில்லை. திருச்சூர் மாநகராட்சியில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது.
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்
மலப்புரம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வலுவாக இருக்கும் இடமாகும். இருப்பினும் இந்த மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 33 இடங்களில் 32 இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது. இது சிறுபான்மை ஆதரவின் ஒருங்கிணைப்பை குறிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேபோல மத்திய கேரளாவில் கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கி அதிகம். கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியானது இடது முன்னணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இருப்பினும் மத்திய கேரளாவில் கிறிஸ்தவ சமூகத்தினர் காங்கிரசுக்கு ஆதரவாக அதிக அளவில் வாக்களித்து இருக்கின்றனர்.
பாஜகவின் நிலை
பாஜக பாலக்காடு நகராட்சி தக்க வைத்துக் கொண்டாலும், சபரிமலை தொடர்பான பிரச்சாரத்துக்கு பிறகு அது ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த பந்தளம் நகராட்சியை இழந்துவிட்டது. கேரளாவில் நடந்த இந்த அரசியல் மாற்றம் குறித்து முதலமைச்சர் பினராய் விஜயன், "இந்த முடிவுகள் எதிர்பார்க்காதது" என்று கூறியுள்ளார். மட்டுமல்லாது முடிவுகளை ஆய்வு செய்து தேவையான திருத்தங்களை செய்து முன்னோக்கி செல்வோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த முடிவு மக்களின் உற்சாகமான உத்தரவு என்று கூறியுள்ளார். மட்டுமல்லாது 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த முடிவு எதிரொலிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications