ரூ.10 கோடி! கேரள லாட்டரியில் சேலத்தை சேர்ந்தவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்.. உடைந்தது சஸ்பெண்ஸ்
திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ.10 கோடி முதல் பரிசு கொண்ட சம்மர் பம்பர் லாட்டரிக்கான குலுக்கல் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் முதல் பரிசு சேலத்தை சேர்ந்தவருக்கு அடித்துள்ளது. குலுக்கல் முடிந்து கிட்டத்தட்ட ஒருவாரம் முடிந்த நிலையில் தற்போது அதிர்ஷ்ட டிக்கெட்டை வாங்கியது யார் என்பது தெரியவந்துள்ளது.
கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. ரூ.250 டிக்கெட் விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசு ரூ.10 கோடியாகும். முதல் பரிசு SG 513715 என்ற எண்ணிற்கு கிடைத்தது. பாலக்காட்டில் உள்ள கிங்ஸ் ஸ்டார் ஏஜென்சி என்ற லாட்டரி கடையில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரிக்கு முதல் பரிசு அடித்தது.

ரூ.10 கோடி பரிசு
முதல் பரிசு அடித்த டிக்கெட் எண் வெளியானதால், 10 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலி யார் என அறிந்து கொள்ள கேரள லாட்டரி பிரியர்கள் பேரார்வம் காட்டினார்கள். பாலக்காட்டை பொறுத்தவரை தமிழகத்தின் எல்லை மாவட்டம் ஆகும். இதனால், தமிழர்கள் யாரேனும் இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கி பரிசு வென்று இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் சேட்டன்கள் மத்தியில் ஏற்பட்டது.
வழக்கமாக லாட்டரி குலுக்கல் முடிந்த ஒரு சில நாட்களில் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்துவிடும். பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிகளை ஏதோ சாதித்துவிட்டது போல மாலை மரியாதை அளித்து நண்பர்களும் உறவினர்களும் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அதேவேளையில், பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிகள் ஒரு சில நேரம், தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்ப மாட்டார்கள். சொந்தக்காரர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள் என்பதால், அடையாளத்தினை வெளியிட மாட்டார்கள்.
சேலத்தை சேர்ந்தவருக்கு முதல் பரிசு
இதனால் ரகசியமாக யாராவது வாங்கினார்களா என்ற பேச்சு எழுந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவருக்கு முதல் பரிசு அடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த ஏஜெண்ட் ஒருவர் 180 டிக்கெட்டுகள் தனலட்சுமி என்ற பெயரில் வாங்கியதாகவும் மலையாள நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.
லாட்டரியை வாங்கிய நபர் நேற்று பாலக்காடு ஏஜென்சிக்கு வின்னிங் டிக்கெட் உடன் சென்றதாகவும் தன்னுடைய பெயரையும் பரிசுத்தொகை வென்ற நபரின் விவரத்தையும் வெளியிட வேண்டாம் என்றும் கோரியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வாங்கினால் தான் பரிசு
பரிசுத்தொகை விழுந்த லாட்டரியுடன் அவர்கள் கேரள லாட்டரி அலுவலகத்தை அணுகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்தவருக்கு லாட்டரியில் பரிசு விழுந்து இருப்பதால், கேரள லாட்டரி விதிகளின் படி அந்த டிக்கெட்டை கேரளாவில் வந்து வாங்கியிருந்தால் மட்டுமே பரிசுத்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, பரிசு விழுந்த டிக்கெட்டை கேரளாவில் வாங்கியதை உறுதி செய்த பிறகு கேரள அரசு பரிசுத்தொகை அளிக்கும். முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியில் திருப்பூரை சேர்ந்த 4 பேருக்கு முதல் பரிசு அடித்தது. இவர்கள் கள்ளச்சந்தையில் டிக்கெட் வாங்கியதாக முதலில் புகார் எழுந்ததால், பரிசுத்தொகையை நிறுத்திவைத்து பிறகு விசாரணைக்கு பிறகு பரிசுத்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதத்துக்குள் வாங்க வேண்டும்
முன்னதாக அதிர்ஷ்டசாலி யாரென்று தெரியாமல் இருந்தபோது பரிசு விழுந்த லாட்டரியை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் இதுபற்றி கூறுகையில், "தனது கடையில் பலரும் டிக்கெட் வாங்குவார்கள். பரிசு வென்ற டிக்கெட் குலுக்கலுக்கு ஓரிரு நாட்கள் முன்பாக வாங்கி செல்லப்பட்டது. வாங்கிய நபர் யார் என்று எனக்கு தெரியவில்லை. தற்போது பரிசுத்தொகை எனது கடையில் விழுந்து இருப்பதால் டிக்கெட் விற்பனை எனக்கு அதிகரித்துள்ளது.
இந்த கடையில் தான் முதல் பரிசு விழுந்தது என விஷு பம்பர் லாட்டரிகளை பலரும் எனது கடையில் வந்து வாங்கி செல்கிறார்கள். இதனால், விற்பனை அதிகரித்து இருக்கிறது. அதுபோக, எனது கடையில் விற்கப்பட்ட லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்து இருப்பதால் கமிஷன் தொகையும் எனக்கு கிடைக்கும்" என்றார். லாட்டரி டிக்கெட்டுகளை பொறுத்தவரை குலுக்கல் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள் டிக்கெட்டை சமர்ப்பித்து பரிசுத்தொகையை கோர வேண்டும்.
விஷு பம்பர் லாட்டரி விற்பனை
ஒரு லட்சத்திற்கும் கீழ் உள்ள தொகை என்றால் மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் கொடுத்து பரிசுத்தொகையை பெறலாம். கேரளாவில் தற்போது விஷு பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும். முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைக்கும். மொத்தம் 54 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட கேரள அரசு முடிவு செய்துள்ளது. VA, VB, VC, VD, VE,VG என ஆறு சீரிஸ்கள் டிக்கெட்டுகள் அச்சிடப்படுகின்றன. இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் மே மாதம் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த டிக்கெட்டிற்கு இரண்டவது பரிசாக 6 பேருக்கு தலா ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. 3-வது பரிசாக ரூ.10 லட்சம் 6 டிக்கெட்டுளுக்கு கிடைக்கும். 4-வது பரிசாக 5 லட்சம் பரிசுத்தொகை 6 பேருக்கு கிடைக்கும். 5-வது பரிசாக ரூ.5 ஆயிரம், 6வது பரிசாக ரூ.2,000 ம், ஏழாவது பரிசாக ஆயிரம், 8-வது பரிசாக ரூ.500, 9-வது பரிசாக ரூ.300 ம், ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சமும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications