ஆட்டோவை அனுமதிக்காத போலீஸ்.. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தந்தையை தோளில் சுமந்து சென்ற மகன்
திருவனந்தபுரம்: கேரளாவில் மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பியவர்களை போலீஸார் லாக்டவுனை காரணம் காட்டி புனலூரில் நிறுத்தியதால் 65 வயது முதியவரை தனது தோளில் சுமந்தபடி அவரது மகன் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் மே 3 வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து உள்ளிட்டவை முடக்கப்பட்டன. எனினும் மருத்துவ காரணங்களுக்காக உரிய ஆதாரத்தை காண்பித்துவிட்டு ஆட்டோ, கார், பைக் ஆகியவற்றில் பயணிக்கலாம் என விதி உள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ஒரு குடும்பத்தை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நிலை
65 வயது முதியவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தனது தந்தையையும் அவரை கவனித்துக் கொண்ட தாயையும் அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு செல்ல அவரது மகன் ஆட்டோவை ஏற்பாடு செய்திருந்தார்.
அனுமதி
மூவரும் அந்த ஆட்டோவில் சென்றனர். அப்போது புனலூர் பகுதியில் நின்றிருந்த போலீஸார் அந்த ஆட்டோவை நிறுத்தினர். லாக்டவுன் நேரத்தில் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என போலீஸார் கூறினர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வந்த ஆவணங்களை காண்பித்த பிறகும் போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர்.
தந்தை
இதனால் செய்வதறியாமல் மூவரும் திகைத்தனர். ஆட்டோக்காரரும் வந்த வழியே திரும்பி விட்டார். இதையடுத்து தந்தையை தோளில் தூக்கிக் கொண்டார் மகன். மருந்து மாத்திரைகள், மருத்துவ ஆவணங்கள் உள்ளிட்டவை அடங்கிய பைகள் அவரது தாய் எடுத்துக் கொண்டார். இதையடுத்து தனது வீட்டை அடைய சுமார் 1 கிலோமீட்டர் தூரமே இருப்பதால் தந்தையை தூக்கிக் கொண்டு நடந்தே சென்றுள்ளார்.
|
அவசர போக்குவரத்து
இந்த வீடியோ வைரலாகியது. இதையடுத்து இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது. அவசியமற்ற போக்குவரத்துக்குத்தான் நாடு முழுவதும் அனுமதியில்லை. ஆனால் மருத்துவ அவசர போக்குவரத்துகள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த போலீஸார் அதை கருத்தில் கொள்ளவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது.