ஐயா.. என் கிணத்துல இருந்த தண்ணிய காணோம்! வடிவேலுபோல் புகாரளித்த நபர் - மிரண்ட அதிகாரிகள்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கிணற்றில் இருந்த தண்ணீரை காணவில்லை என அதிகாரிகளிடம் ஒரு நபர் புகாரளித்திருப்பது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
கேரளா மாநிலம் திருச்சூரை அடுத்த வெங்கினிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷன்.
இவர் தனது வீட்டு தோட்டத்தின் அருகே கிணறு ஒன்றை தோண்டி அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரில் தனது குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்

சதீஷனின் கிணறு
கிணற்றில் உள்ள ஊற்றுகள் மூலமாகவும், மழை நீர் மூலமாகவும் கிணத்தில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை சதீஷன் கிணற்றில் கட்டப்பட்டுள்ள கயிற்றின் உதவியுடன் அளவு கருவி மூலம் அளந்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அந்த வகையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக சதீஷன் கிணற்றில் இருந்த தண்ணீர் அளவை பார்த்துள்ளார்.

தண்ணீர் மாயம்
அப்போது கிணற்றில் 18 அடி அளவுக்கு தண்ணீர் இருந்திருக்கிறது. மேலும் ஊற்றில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருந்தததை அவர் கவனித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து மறுநாள் காலை அவர் கிணற்றை பார்த்த போது கிணறு வறண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரும் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த சதீஷன், அதற்கான காரணத்தை அறிய கிணற்றை சுற்றிலும் பார்த்து இருக்கிறார்.

அதிகாரிகளிடம் புகார்
கிணற்றின் அடிப்பகுதியில் உடைப்பு ஏதாவது ஏற்பட்டிருக்குமா? என்றும் அவர் கவனித்து உள்ளார். தண்ணீர் குறைந்ததற்கான தடயமே தெரியவில்லை. தனது கிணற்றில் மாயமான தண்ணீர், அருகில் உள்ள கிணறுகளில் தேங்கி இருக்குமா என்ற சந்தேகத்தில் அண்டை வீடுகளில் இருந்த கிணறுகளையும் அவர் பார்த்துள்ளார். எதற்கும் விடை கிடைக்காததால் விரக்தியடைந்த சதீஷன் இதுபற்றி மண்வளத்துறை மற்றும் புவியியல் பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

அதிகாரிகள் ஆய்வு
இதனை தொடர்ந்து அதிகாரிகள் சதீஷன் வீட்டுக்கு சென்று கிணற்றை பார்வையிட்டு இருக்கின்றனர். ஒரே நாள் இரவில் 18 அடி தண்ணீரும் மாயமாக வாய்ப்பு இல்லை எனக்கூறிய அதிகாரிகள், இது எப்படி நடந்தது என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வு நடத்திய பிறகே இதற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications