புட்டபர்த்தி சாய்பாபா இருக்காரு பேசுறீங்களா? சாப்ட்வேர் என்ஜினியரிடம் ரூ 2 கோடி ஏமாற்றிய மந்திரவாதி
திருவனந்தபுரம்: உயிரிழந்த அம்மாவுடனும் புட்டபர்த்தி சாய்பாபாவுடனும் பேச வைப்பதாக சாப்ட்வேர் என்ஜீனியரை நம்ப வைத்து ரூ 2 கோடி மோசடி செய்ததாக கேரளாவை சேர்ந்த மந்திரவாதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆன்டர்சன் சாலையைச் சேர்ந்தவர் கவுதம் சிவசாமி. இவர் மென்பொருள் பொறியாளராக இருந்து வருகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு நைஜீரியா நாட்டில் வேலை சென்றிருந்தார். அப்போது அவருடன் பணிபுரிந்த கேரளாவை சேர்ந்த சுப்பிரமணியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் குடும்ப நண்பர்கள் போல் பழகினர். இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு கவுதம் சிவசாமி வேறு வேலை கிடைத்ததால் துபாய்க்கு சென்றுவிட்டார். அது போல் சுப்பிரமணியும் நைஜீரியாவிலிருந்து கேரளாவிற்கு சென்றுவிட்டார்.

எனினும் இவர்களுக்குள் பழக்கம் இருந்து வந்தது. கவுதம் துபாயிலிருந்து சென்னை வரும்போதெல்லாம் சுப்பிரமணியை அவரை சந்திக்கும் வழக்கத்தை வைத்திருந்தார். கவுதமிற்கு கடவுள் பக்தி அதிகம். இதை தனக்கு சாதகமாக சுப்பிரமணி பயன்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. மேலும் அவரை அடிக்கடி கோயில்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.
மேலும் புட்டபர்த்தி சாய்பாபா என்னிடம் நேரடியாக பேசுவார் என்றெல்லாம் கவுதமிடம் சுப்பிரமணி அளந்துவிட்டுள்ளார். இதை கவுதமும் நம்பியுள்ளார். இதையடுத்து கேரளாவில் இருக்கும் தனது வீட்டுக்கு வருமாறு கவுதமை சுப்பிரமணி அழைத்துள்ளார். அப்போது கேரளாவில் உள்ள வீட்டில் சுப்பிரமணி பெரிய புட்டபர்த்தி சாய்பாபா படத்தை வைத்திருந்தார்.
அதிலுருந்து விபூதியை வரவழைப்பதாகவும் எலுமிச்சை பழத்தை வர வைப்பதாகவும் கூறி தனது சித்து விளையாட்டுகளை ஆடியுள்ளார். இதையெல்லாம் பார்த்து அசந்து போன கவுதம், சுப்பிரமணியை முழுமையாக நம்பினார். அதன்பின்னர் இறந்து போன கவுதமின் அம்மா ஆன்மா தன்னிடம் பேசுவதாகவும் சில பரிகாரங்கள், வேண்டுதல்களை செய்யக் கூறுவதாகவும் சுப்பிரமணி, கவுதமை நம்ப வைத்தார்.
இதையடுத்து 2015 ஆம் ஆண்டு முதல் சிறுக சிறுக வங்கி பரிவர்த்தனை மூலம் ரூ 2 கோடியை சுப்பிரமணி பெற்றுள்ளார். கவுதமை நேரில் பார்க்கும் போதெல்லாம் உன்னை பற்றி இப்படி பேசுகிறார், அப்படி பேசுகிறார் என்றெல்லாம் கதை அளந்துவிட்டுள்ளார். ஆனால் கவுதமோ தனது தாயின் குரலை கேட்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

இதனால் அம்மா பேசுவது தனக்கு கேட்கவில்லை என கவுதம் கூற அதற்கு சுப்பிரமணியோ எப்படி கேட்கும், நீ அந்தளவுக்கு போன ஜென்மத்தில் பாவம் செய்திருக்கிறார். இதற்கு பரிகாரமாக அறக்கட்டளையை ஆரம்பிக்க வேண்டும். தற்போது வசித்து வரும் பங்களாவை தனது பெயருக்கு எழுதி தர வேண்டும் என சுப்பிரமணி கேட்டுள்ளார்.
மந்திரவாதியின் பேச்சை கேட்டு தனது குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கவுதமின் 3 வயது மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். குடும்பத்தில் அடுத்தடுத்து மரணங்கள் ஏற்பட்டன. இதனால் தனிமையில் கவுதம் யோசித்த போதுதான் சுப்பிரமணி தன்னை ஏமாற்றுவதைஉணர்ந்துள்ளார். இதையடுத்து தான கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு சுப்பிரமணி கேட்ட போது மந்திரம் போட்டு முடக்கி வைத்துவிடுவேன் என கவுதமை சுப்பிரமணி மிரட்டியுள்ளார்.
இது குறித்து கவுதம் கடந்த ஆண்டு மே மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதை எப்படியோ தெரிந்து கொண்ட சுப்பிரமமி தலைமறைவாகவே இருந்துள்ளார். ஓராண்டாக அவரை தேடி வந்த நிலையில் திருவனந்தபுரத்தில் வைத்து அவரை தனிப்படையினர் கைது செய்தனர். விசாரணையில் கவுதமிடம் இருந்து ஏமாற்றி வாங்கி பணத்தில் கேரளாவில் ஆடிட்டர் தொழில் செய்து வருவதாகவும் மனைவி தங்கம், வைரம் வாங்கி கொடுத்து, மகளை வெளிநாட்டில் படிக்க வைத்து வருவதும் தெரியவந்தது.
கவுதமின் மகள் இறப்புக்கும் சுப்பிரமணிதான் காரணமாக இருப்பாரோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது போல் வேறு யாரையாவது ஏமாற்றி சுப்பிரமணி பணம் பறித்துள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் நரபலி கலாச்சாரம் தலைத்தூக்கியுள்ளதால் அது போன்ற நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications