இருட்டு அறையில் பூட்டிய மகன்.. பசியால் இறந்த தந்தை.. குடலில் உணவே இல்லை.. பிரேத பரிசோதனையில் பகீர்
திருவனந்தபுரம்: கேரளாவில் பெற்றோரை இருட்டு அறைக்குள் வைத்து மகன் பூட்டியதால் பசியால் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அசம்பாணி பகுதியைச் சேர்ந்தவர் பொடியன் (80). இவரது மனைவி அம்மிணி (78). இவர்கள் இருவரும் இளைய மகன் ரெஜியுடன் (42) வசித்து வந்தனர்.
இந்த நிலையில் வயது முதிர்ந்த பெற்றோரை ரெஜி தனது வீட்டில் உள்ள ஒரு இருட்டு அறையில் வைத்து பூட்டி வைத்திருந்தார். அது போல் அவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக உணவு, நீர், மருந்துகள் என எதையும் கொடுக்காமல் இருந்துள்ளார்.

மனைவி
பெற்றோர் இருக்கும் பக்கத்து அறையில் மனைவி ஜான்சியுடன் வசித்து வந்த ரெஜி இருவரும் வேலைக்கு செல்லும் போது பெற்றோரை பூட்டி வைத்திருப்பதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே நாயை வாங்கி அதை வீட்டு முன் கட்டி சென்றுள்ளார்.

மருத்துவமனை
வயது முதிர்ந்தோர் குறித்த கணக்கெடுப்பு நடத்த அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோரை வீட்டிற்குள் வைத்து பூட்டியிருந்த சம்பவம் குறித்து போலீஸில் தகவல் அளித்தனர். வீட்டின் பூட்டை உடைத்து முதியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பசியால் இறந்த முதியவர்
அப்போது ரெஜியின் தந்தை பொடியன் பசியால் இறந்து கிடந்தது தெரியவந்தது. அது போல் தங்கள் நிலையை எண்ணி தாய் மனநலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அம்மிணியை மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். பொடியனின் உடல் காஞ்சிரப்பள்ளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தெளிவு
அவருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் பொடியனின் சிறுகுடல், பெருங்குடலில் துளி கூட உணவு இல்லை. குடல்கள் சுருங்கியிருந்தன. தொண்டையும் ஒரு பொட்டு தண்ணீர் கூட இல்லாமல் உலர்ந்திருந்தது தெரியவந்தது. இதன் மூலம் அந்த முதியவர் பட்டினியால் உயிரிழந்திருப்பது தெளிவாக தெரிகிறது.

மனிதம் எங்கே?
இதையடுத்து ரெஜி, மனைவி ஜான்சி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறந்தது முதல் ஒவ்வொரு குழந்தையையும் தாலாட்டி, சீராட்டி, பாலூட்டி வளர்க்கும் தாயையும், தன் பிள்ளைகளின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கும் தந்தையையும் இத்தனை கொடூரமாக கொடுமை செய்திருப்பதை பார்க்கும் போது மனிதம் எங்கே என கேட்கத் தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications