கேரளாவில் பரிசு விழுந்தது தெரியாமல் லாட்டரியை குப்பையில் வீசிய நபர்.. கடைசி வரை விடாத அதிர்ஷ்டம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒருவருக்கு கடைசி வரை விடாமல் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. லாட்டரி டிக்கெட்டை வாங்கியவர், பரிசு விழுந்தது தெரியாமல் டிக்கெட்டை குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து விட்டு சென்றபின், உண்மை தெரியவந்ததும், அதை குப்பைத்தொட்டியில் தேடி கண்டுபிடித்து பரிசு பெற்றிருக்கிறார். கேரளாவில்தான் இந்த வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
கேரளாவில் உள்ள காஞ்ஞங்காடு பகுதியை சேர்ந்தவர் ரகுகண்ணன். பார்மசிஸ்ட் ஆக வேலை பார்த்து வரும் இவருக்கு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. அதிக கடன்கள் இருந்ததால் என்றாவது ஒருநாள் தனக்கு லாட்டரி அடிக்கும் என்ற நம்பிக்கையில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் லாட்டரி வாங்கி வந்து இருக்கிறார்.

குப்பைத் தொட்டியில் வீசினார்
அதுவும், 45 மற்றும் 12 என்ற எண் தான் தனக்கு லக்கி நம்பர் என்பதால் அந்த குறிப்பிட்ட எண்ணில் முடியும் லாட்டரியை மட்டும் வாங்கி வந்து இருக்கிறார். அந்த வகையில், நடந்தே லாட்டரி டிக்கெட்டுகளை வியாபாரம் செய்து வரும் கிருஷ்ணன் என்பவரிடம், இரண்டு சீட்டுகளை வாங்கியுள்ளார். லாட்டரி குலுக்கல் நடைபெற்று முடிந்த பிறகு, குலுக்கல் முடிவுகளை சாம் சாம் என்ற லாட்டரி கடையில் பார்த்து இருக்கிறார்.
5 ஆயிரத்திற்கு கீழ் பரிசு அடித்து இருக்கிறதா என ஆர்வத்துடன் பார்த்த ரகு கண்ணன், மூன்றாம் பரிசு விழுந்த WF 438045 என்ற எண்ணை கவனிக்கவில்லை. இந்த டிக்கெட்டைத்தான் அவர் வாங்கியிருந்துள்ளார். பரிசு விழாத விரக்தியில் டிக்கெட்டை கடையில் இருந்த குப்பை தொட்டியில் வீசி சென்று விட்டார்.
அதே நேரத்தில் ரகு கண்ணனுக்கு லாட்டரி டிக்கெட் விற்ற கிருஷ்ணன் என்பவர் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் விழுந்துள்ளதே என வாழ்த்து கூறியதோடு அதை போய் கிளைம் பண்ணுங்க எனக் கூறியுள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த ரகு கண்ணன், நடந்தவற்றை கூறியுள்ளார். மேலும், ரிசல்ட் பார்த்த லாட்டரி கடையான சாம் சாம் லாட்டரி கடைக்கு சென்று உரிமையாளர் வினோத்திடம் நடந்த அத்தனையும் கூறியிருக்கிறார் ரகு கண்ணன்.
விடாமல் துரத்திய அதிர்ஷ்டம்
அவரது நல்ல நேரமோ என்னவோ தெரியவில்லை. குப்பையில் வீசிய லாட்டரி டிக்கெட்டுகளை கடைக்காரர் ஒரு மூட்டையாக கட்டி வைத்து இருந்து இருக்கிறார். அந்த கடை உரிமையாளரான வினோத், உடனடியாக தேவையில்லாத லாட்டரிகளை வைத்து இருந்த மூட்டையை எடுத்து காட்டி, இதில் இருக்கிறதா? பாருங்கள் என கொடுத்துள்ளார். ஒரு லட்சம் ஆச்சே சும்மா விட முடியுமா? மூட்டை முழுவதும் தேடி பார்த்து இருக்கிறார் ரகு கண்ணன்.
ஆனால் டிக்கெட் எண்னை கண்டுபிடிக்க முடியவில்லை. வேண்டும் என்றால் இதை வீட்டிற்கு எடுத்து சென்று பொறுமையாக பாருங்கள் என கடை உரிமையாளர் ஐடியா கொடுத்துள்ளார். ஆனாலும் இனி எங்கே இருக்க போகிறது என போய் விட்டார் ரகு கண்ணன். அவர் போன பிறகு கடை உரிமையாளரான வினோத் தனது கடையில் உள்ள ஊழியர்களை வைத்து தேடியிருக்கிறார். அதில் பரிசு விழுந்த டிக்கெட்டை கண்டுபிடித்து விட்டார்கள்.
கடைக்காரருக்கு பாராட்டு தெரிவித்த மக்கள்
ஆனால், டிக்கெட்டை தேடி வந்த ரகு கண்ணனை, கடை உரிமையாளரான வினோத்திற்கு தெரியாது. அவரை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்து இருந்த போதுதான், சிசிடிவியில் கேமராவில் முகம் பதிவாகியிருக்குமே என நினைத்த வினோத், கடந்த 24 ஆம் தேதி பதிவான சிசிடிவி காட்சிகளை தேடி பார்த்தார். அதில் ரகு கண்ணன் புகைப்படத்தை எடுத்து தனக்கு தெரிந்தவரிடம் விசாரித்தார்.
இதில், அவர் காஞ்ஞங்காடு பகுதியில் மருந்து கடை வைத்து இருப்பது தெரிந்தது. உடனே அவரிடம் லாட்டரி டிக்கெட்டை கொடுத்து அவருக்கு ஒரு லட்சம் கிடைக்க உதவி செய்து இருக்கிறார். கடைக்காரரே அந்த டிக்கெட்டிற்கு ஒரு லட்சம் ரூபாயை வாங்கியிருந்தால் கூட யாருக்கும் தெரியாது. ஆனாலும் நேர்மையாக டிக்கெட்டை கொண்டு போய் சேர்த்த கடைக்காரருக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
கேரளா லாட்டரி விற்பனை
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. ரூ.70 லட்சம், 80 லட்சம், 1 கோடி வரையிலான பரிசுத்தொகை கொண்ட டிக்கெட்டுகள் ரூ.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்ரீசக்தி, நிர்மலா, காருண்யா, ஃபிப்டி ஃபிப்டி என வாரத்தின் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. அதுபோக வருடத்திற்கு ஆறு பம்பர் குலுக்கலும் நடைபெறுகிறது. பம்பர் லாட்டரிகளுக்கு பல கோடி ரூபாய் முதல் பரிசாக கிடைக்கும்.
தற்போது அங்கு சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. முதல் பரிசாக இந்த டிக்கெட்டுக்கு ரூ.10 கோடி அளிக்கப்படுகிறது. இதனால், இந்த முறையாவது நமக்கு அதிர்ஷ்ட காற்று வீசுகிறதா பார்ப்போம் என்ற ஆர்வத்தில் கேரள லாட்டரி பிரியர்கள் பலரும் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications