அன்று கவுரி அம்மாள்.. இன்று சைலஜா டீச்சர்.. தொடர்ந்து புறக்கணிக்கப்படும் பெண் தலைவர்கள்?
திருவனந்தபுரம்: அன்று கவுரி அம்மாவுக்காக குரல் கொடுத்த மக்கள் இன்று சைலஜா டீச்சருக்காக குரல் கொடுத்து வருகிறார்கள். கேரளாவை இதுவரை பெண்கள் ஆண்டதே இல்லை, அந்த வாய்ப்பை ஏன் சைலஜா டீச்சருக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.
Recommended Video
கேரளாவில் நடந்து முடிந்த தேர்தலில் இடதுசாரிகள் அமோக வெற்றி பெற்றார்கள். இன்றைய தினம் கேரள முதல்வராக பினராயி விஜயன் அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்கிறார்கள்.
இந்த அமைச்சரவை பட்டியலில் சைலஜா டீச்சரின் பெயர் விடுபட்டுவிட்டது. அதாவது இடதுசாரிகள் கட்சியை பொருத்தமட்டில் ஏற்கெனவே இரு முறை அமைச்சராக இருந்தவர்களுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்கக் கூடாது என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் விதியாகும்.

அமைச்சரவை
அந்த வகையில் சைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. இரு முறை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சைலஜா நிபா வைரஸ், கொரோனா வைரஸ் இரண்டையும் வெற்றிக்கரமாக எதிர்கொண்டு வெளிநாட்டினரே பாராட்டும் அளவுக்கு சாதனை படைத்தார்.

சைலஜா டீச்சர்
இதனால் உலகமெங்கும் சைலஜா டீச்சரை பற்றிய பேச்சுதான் இருக்கிறது. பெண் என்பதால் சைலஜா டீச்சர் புறக்கணிக்கப்படுகிறாரா என்ற கேள்வியையும் கேரள பெண்ணியவாதிகள் முன் வைக்கிறார்கள். இவர்கள் மட்டும் அல்ல இளைஞர்கள், பொதுமக்கள் என இதே கருத்தைதான் முன் வைக்கிறார்கள்.

பிரதான கேள்வி
#bringourteacherback, #BringBackShailajaTeacher ஆகிய ஹேஷ்டேகுகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால் சைலஜாவோ கட்சியின் நிலைப்பாட்டிற்கே ஆதரவாக இருக்கிறார். எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்கிறார். அமைச்சராக வேண்டாம் ஏன் சைலஜா டீச்சரை முதல்வராக்கக் கூடாது என்பதுதான் பிரதான கேள்வியாக உள்ளது.

கேரளா
இதேபோல் 1987 ஆம் ஆண்டு வேறொரு பெண்ணுக்காக கேரளாவில் மக்கள் குரல் கொடுத்த வரலாறு இருக்கிறது. அவர் யார் என்றால் அண்மையில் மறைந்த மூத்த பெண் அரசியல்வாதி கவுரி அம்மாள். இவர் 1957 ஆம் ஆண்டு இடதுசாரிகள் ஆட்சியின் போது கேரளாவின் முதல் வருவாய்த் துறை அமைச்சரானார்.

முதல்வர்
இதையடுத்து படிப்படியாக உயர்ந்த அவர் பெரும் தலைவராக உருவெடுத்தார். எங்கு பார்த்தாலும் கவுரி அம்மாளின் பேச்சாகவே இருந்தது. இந்த நிலையில் 1987 ஆம் ஆண்டு இவரை முன்னிறுத்தியே தேர்தல் பிரச்சாரங்கள் நடந்தன. இதனால் இவர் முதல்வராவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

சைலஜா
அந்த ஆண்டு நடந்த தேர்தலில் இடதுசாரிகள் வென்ற நிலையில் கவுரி அம்மாளுக்கு முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. மேலும் உள்கட்சி பூசல் காரணமாக கவுரி அம்மாள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். என்ன காரணம் என்பது குறித்து கட்சி தலைமை அறிவிக்கவே இல்லை. தற்போது இதே நிலைதான் சைலஜாவுக்கு நடந்துள்ளது.

சைலஜாவுக்கு குரல்
பெண் என்ற ஒரு காரணத்திற்காக சைலஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படாமல் அவர் புறக்கணிக்கப்படுகிறாரா என கேள்வி எழுப்பிகிறார்கள். கட்சி விதிகளின் அமைச்சர் பதவி கொடுக்காவிட்டால் அவரை முதல்வராக்குங்கள் என குரல் ஓங்கி எழுகிறது. இதுவரை பெண் தலைவர்கள் ஒருவரும் கேரளாவை ஆண்டதில்லையே, அந்த வாய்ப்பு தாருங்கள் என்கிறார்கள். அன்று கவுரி அம்மாவுக்கு குரல் கொடுத்த கேரள மக்கள் இன்று சைலஜாவுக்காக குரல் கொடுக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications