முதல்வர் - அமைச்சர்களை ‛மாண்புமிகு’ என்ற அடைமொழியில் தான் அழைக்கணும்.. அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு
திருவனந்தபுரம்: 'பொதுமக்களின் புகார் மனுக்களுக்கு பதில் அளிக்கும்போது முதல் அமைச்சர், அமைச்சர்களை, 'மாண்புமிகு' என்ற அடை மொழியுடன் தான் அழைக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு கேரளா அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் பினராயி விஜயன் பிறப்பித்துள்ளார்.
கேரளாவில் இடதுசாரி கட்சிகளின் ஆட்சி நடந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக இருக்கிறார்.
இதற்கிடையே தான் தற்போது கேரளாவில் முதல்வர், அமைச்சர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அரசு நிகழ்ச்சிகளில் பெயர் சொல்லி அழைக்கும்போதும் மரியாதை குறைவாகவும், பொதுமக்களின் புகார் மனுக்களுக்கு பதிலளிக்கும்போதும், கடிதங்கள் எழுதும்போது பெயருக்கு முன்னால் உரிய மரியாதைக்கான சொல் இடம்பெறுவது இல்லை என்ற புகார்கள் எழுந்தன.
இதற்கு தீர்வு காண முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்தார். பினராயி விஜய் கேரளா மாநில நிர்வாக சீர்திருத்தத்துறையை கையில் வைத்துள்ளார். இந்நிலையில் தான் அந்த துறையின் சார்பில் கடந்த மாதம் 30ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த மாத இறுதியில் பிறப்பித்தாலும் கூட இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், மற்றும் அலுவலக தலைமை அதிகாரிகளுக்கு சுற்றிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுமக்களிடம் இருந்து வரும் அரசு தொடர்பான புகார்கள் மற்றும் மனுக்களுக்கு பதில் அளிக்கும் போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பெயர் முன், Bahumanappetta ( இதற்கு தமிழில் 'மாண்புமிகு' என்று பொருள்) என்ற வார்த்தையை சேர்த்து பதில் அனுப்ப வேண்டும்.
இதுதொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்த அறிவுறுத்தலை கடைப்பிடிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு விவகாரம் தற்போது கேரளாவில் பேசும்பொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications