நார்க்கோட்டிக் ஜிகாத் குறித்து சர்ச்சை பேச்சு.. நீதிமன்ற உத்தரவுபடி கேரள பிஷப் மீது வழக்குப் பதிவு
திருவனந்தபுரம்: லவ் ஜிகாத், நார்க்கோட்டிக் ஜிகாத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கேரள பிஷப் ஜோசப் கல்லரங்காட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தில் உள்ளது பாலா மறை மாவட்டம். இந்த மறை மாவட்ட பிஷப் மார் ஜோசப் கல்லரங்காட். இவர் குருவிலங்காடு சபையின் யூடியூப் சேனலில் லவ் ஜிகாத், போதை ஜிகாத் ஆகியவை குறித்து பேசியிருந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய பேச்சை பிஷப் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி பேசியுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசுகையில் கத்தோலிக்க பெண்களையும் இளைஞர்களையும் லவ் ஜிகாத், நார்க்கோட்டிக் ஜிகாத் ஆகியவை மூலம் வீழ்த்துகிறார்கள்.

ஸ்லீப்பர் செல்
கேரள மாநிலம் ஏற்கெனவே பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல் கேந்திரமாக இருப்பதாக முன்னாள் டிஜிபியே கூறியிருந்தார். உலகத்தில் நீதியையும் சமாதானத்தையும் இஸ்லாமையும் நிலைநாட்ட போராட்டம் செய்ய வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் கருதுகின்றன. அவர்கள் ஆயுதம் பயன்படுத்த முடியாத இடங்களில் சில சூழ்ச்சிகளை செய்கிறார்கள்.

லவ் ஜிகாத்
அந்த சூழ்ச்சிகள் மிக முக்கியமானவை லவ் ஜிகாத் மற்றும் நார்கோட்டிக் ஜிகாத் ஆகும். இந்த இரு விஷயங்களில் கத்தோலிக்க பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கத்தோலிக்க குடும்பங்கள் கவனமாக இருத்தல் வேண்டும். இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இஸ்லாமிய நாடுகளில் மற்ற மதங்களை சேர்ந்த பெண்கள் எப்படி வந்தார்கள் என்பதை ஒருவர் ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது.

ஆப்கானிஸ்தான்
கடந்த 2016 ஆம் ஆண்டு வடக்கு கேரளாவிலிருந்து ஆப்கான் சென்றவர்களில் 5 பேர் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளனர் என பிஷப் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். பிஷப்பின் பேச்சை பாஜகவை தவிர மற்ற அரசியல் கட்சிகள் கண்டித்தன. சொன்ன கருத்துகளை திரும்ப பெற வேண்டும் என பிஷப்பிடம் கோரிக்கை வைத்த போது அவர் மறுத்து விட்டார். மேலும் தான் சொன்னது சரி என அவரது தேவாலய நாளிதழ் தலையங்கமான தீபிகாவில் எழுதியுள்ளார்.

கேரளாவில் பரபரப்பு
பிஷப்பின் பேச்சு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் நார்க்கோட்டிக் ஜிகாத் என்ற ஒன்று இல்லை என மறுப்பு தெரிவித்தார். ஆனால் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சரும் பாஜக மாநில தலைவருமான முரளிதரனோ பிஷப் கூறியதில் என்ன தவறு உள்ளது. அவர் சொன்னது சரியே. ஒட்டுமொத்த சமூகத்தையே நாம் குற்றம்சாட்டவில்லை என கூறியதுடன் பிஷப்பை நேரில் சந்தித்து ஆதரவும் தெரிவித்தார்.

புகார்
இந்த நிலையில் பிஷப் ஜோசப் பேசியது மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் அமைப்பு குருவிலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. ஆனால் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து பாலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் பிஷப்பிடம் விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் , காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பிஷப் ஜோசப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications