11 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்த பெண்.. கணவனின் முட்டாள்தனமான செயலால்.. பெரும் சோகம்
திருவனந்தபுரம் : கேரளாவின் திருவனந்தபுரம் அருகே கடந்த 11 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்த பெண், கல்லூரி படிப்புக்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை மாய்த்துக் கொண்டார். கர்ப்பிணி பெண் படிக்க முடியாததால் விபரீத முடிவெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் வர்க்கலையை சேர்ந்தவர் கிரண், இவர் அந்த பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (வயது20). லட்சுமி, ஆட்டோ டிரைவர் கிரணை கடந்த 11 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

லட்சுமி கிரண் தம்பதி வர்க்கலா பேரேற்று பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். லட்சுமி ஒரு கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதேநேரம் அவர் கர்ப்பிணியாக இருந்தார்.
இந்தநிலையில் கடந்த மார்ச் 17ம் தேதி அன்று மதியம் கிரண் ஆட்டோ ஓட்ட வெளியே போய்விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த லட்சுமி ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் லட்சுமியை மீட்டு பாரிப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் . அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்
இதுகுறித்து கடைக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், லட்சுமி காலேஜ் சென்று படிப்பு தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. லட்சுமி கல்லூரியில் சென்று படிக்கவே கூடாது என்று கிரண் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த லட்சுமி தற்கொலை செய்து இருக்கலாம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக கிரணை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி படிப்புக்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் திருமணம் செய்த கர்ப்பிணி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications