கேரளா மலப்புரம் அருகே வெடித்து சிதறியது வெடிகுண்டா? வீசியது கோவை பயங்கரவாதிகளின் கூட்டாளிகளா?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடப்பால் அருகே இரு இளைஞர்கள் வெடிக்க செய்தது சக்தி குறைவான வெடிகுண்டா? அந்த இருவரும் கோவையில் நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டி சிக்கிய பயங்கரவாதிகளின் கூட்டாளிகளா? என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் சிலிண்டர் வெடிகுண்டு மூலம் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது அம்பலமாகி உள்ளது. கோவை ஜமேஷா முபின் என்பவர் காரில் வெடிமருந்துகளுடனான சிலிண்டரை எடுத்துச் சென்ற போது வெடித்து சிதறியது. இதில் முபின் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

பயங்கரவாதிகள் கைது
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில்தான் பயங்கரவாதிகளின் சிலின்டர் வெடிகுண்டு சதித் திட்டம் வெளியானது. இது தொடர்பாக தற்போது வரை முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலிண்டர் வெடிகுண்டு மூலம் கோவையின் பல இடங்களில் பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.

கேரளா தொடர்பு குறித்து விசாரணை
மேலும் இலங்கை தேவாலய தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதியான கேரளா சிறையில் உள்ள அசாருதீனை செத்துப் போன முபின் சந்தித்தது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கேரளா மாநில பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சிலருக்கும் கோவை பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோவை சதி வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வசம் ஒப்படைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் வெடிபொருள் வீச்சு
இந்நிலையில் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடப்பால் மேம்பாலத்தில் வெடிபொருட்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எடப்பால் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இரு இளைஞர்கள் பிளாடிக்கால் சுற்றப்பட்ட பொருள் ஒன்றுக்கு தீ வைத்தனர். இதில் அந்த பொருள் வெடித்து சிதறியது. இதனால் மேம்பாலத்தின் கீழ் லேசான விரிசலும் ஏற்பட்டது.

கோவை பயங்கரவாதிகளின் கூட்டாளிகளா?
இதனையடுத்தே இளைஞர்கள் சக்தி குறைவான வெடிகுண்டை வெடிக்க செய்தது தெரியவந்தது. இது தொடர்பான போலீஸ் விசாரணையில்தான் இரு இளைஞர்கள் வெடிபொருளை வைத்து தீ மூட்டும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை பயங்கரவாத சதியில் கேரளாவை சேர்ந்தவர்களின் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் வெடிபொருளை வெடிக்க செய்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிசிடிவியில் சிக்கிய இரு இளைஞர்களும் கோவை பயங்கரவாதிகளின் கூட்டாளிகளா? இல்லையா? என்பது விசாரணையில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications