நான் அவன் இல்லை..4 பெண்களை கல்யாணம் முடித்த தீபு பிலிப்.!கடைசியில் போட்டுக் கொடுத்ததே பேஸ்புக் தான்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே அடுத்தடுத்து பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவின் கல்யாணராமன் என அழைக்கப்படும் இவர் இரு பெண்களை திருமணம் செய்த நிலையில், அந்த பெண்கள் இருவரும் ஃபேஸ்புக்கில் பிரண்ட்ஸ் ஆக இருந்ததால் தற்போது இவர் சிக்கி சிறையில் தள்ளப்பட்டு இருக்கிறார்.
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட போதிலும் கல்யாண மோசடிகள் பல இடங்களில் கலர் கலராக அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஐந்து ஆண்களை திருமணம் செய்த பெண் ஒருவர் சிக்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம்..

இந்த நிலையில் கேரளாவில் காசர்கோடு பகுதியில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் வசமாக சிக்கி இருக்கிறார், காசர்கோடு அருகே வெள்ளரிக் குன்று பகுதியைச் சேர்ந்த தீபு பிலிப் என்பவர் தான் இப்போது சிக்கி இருக்கும் நபர்.
பெண்களை காதலிப்பதாக கூறி திருமணம் செய்வது அவர்களிடம் நகை பணத்தை பறித்துக் கொண்டதும் எஸ்கேப் ஆவது என இதனை ஒரு தொழிலாகவே செய்து வந்திருக்கிறார். யாராவது அழகான பெண்ணை பார்த்து விட்டால் உடனடியாக அவர்களிடம் வழிந்தோ கெஞ்சியோ காதலிப்பதாக கூறியோ பேசிபழகி, தான் யாரும் இல்லாத அனாதை, பல ஆண்டுகளாகவே தனியாக வசித்து வருகிறேன் என கதை விட்டு, மனம் இறங்கும் பெண்களை வலையில் விழ வைப்பது தான் இவரது வேலை எனக் கூறப்படுகிறது.
வலையில் விழுந்தவர்களுடன் திருமணம் முடிந்ததும் அவர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு தப்பிச் செல்வது இவருக்கு வழக்கம் என கூறப்படுகிறது. அப்படி பத்து ஆண்டுகளுக்கு முன் காசர்கோட்டை சென்ற இளம் பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார் தீபு பிலிப். மூன்று ஆண்டுகள் அவரோடு வாழ்ந்த போது இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கிறது. பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து நகை பணத்தை திருடிக் கொண்டு எஸ்கேப் ஆகி உள்ளார்.
தொடர்ந்து காசர்கோட்டிலேயே இரண்டாவதாக ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அந்த பெண்ணுடன் தமிழகம் வந்து சில ஆண்டுகள் வாழ்ந்து அவரையும் விட்டு விட்டு எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து இருக்கிறார். மூன்றாவது திருமணம் செய்த பெண்ணுடன் வாழ்ந்த போது கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த விவாகரத்தான ஒரு பெண்ணுடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
அவரிடமும் திருமணம் செய்து கொள்வதாக பழைய டையலாக்கை பேசி மயக்கிய தீபு பிலிப், நான்காவதாக அவரை திருமணம் முடித்துள்ளார். ஆனால் நான்காவது மனைவி தான் தன்னை சிக்க வைப்பார் என தெரியவில்லை தீபு பிலிப்புக்கு. இரண்டாவது மனைவியான காசர்கோட்டை சேர்ந்த இளம் பெண்ணும் நான்காவதாக திருமணம் செய்த பெண்ணும் பேஸ்புக்கில் தோழிகளாக இருந்திருக்கின்றனர்.
அப்போது திருமணம் முடிந்த கையோடு தனது திருமண புகைப்படத்தை அந்த பெண்ணுக்கு அனுப்பி உள்ளார் நான்காவதாக திருமணம் செய்த பெண். அப்போது தன்னை ஏமாற்றியது அந்த நபர் தான் என இரண்டாவது மனைவி கூற நான்காவது மனைவி போலீசில் புகார் அளித்திருக்கிறார். அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட பெண்களும் புகார் அளிக்க தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் தீபு பிலிப்.












Click it and Unblock the Notifications