ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு..கேரளாவில் என்ஐஏ விசாரணைக்கு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை
திருவனந்தபுரம்: கேரளாவில் பயணிகள் ரயிலில் பெட்ரோல் ஊற்றி எரித்து மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் என்ஐஏ விசாரணைக்காக வந்த முகம்மது ஷாபி என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொச்சி காவல்துறையினர் முகம்மது ஷாபியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஆலப்புழா - கண்ணூர் எக்ஸ்பிரஸ் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது. D1 பெட்டியில் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சக பயணிகள் மீது ஒரு நபர் பெட்ரோல் ஊற்றி நெருப்பை பற்ற வைத்துள்ளார்.
வேகமாக பரவிய தீ பயணிகள், இருக்கைகள், உடைமைகள் மீது பற்றியது. அப்பெட்டியில் இருந்து கரும்புகை கிளம்பியது. பயணிகள் மத்தியில் அலறல் சத்தம் கேட்டது.

இந்த கோர சம்பவத்தில் ஒரு பெண், பச்சிளங் குழந்தை, ஒரு ஆண் என 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றவர்கள் மோசமான தீக்காயங்கள் உடன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து எலத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. தீ பற்றிய பெட்டி மட்டும் அகற்றப்பட்டு மற்ற பெட்டிகளுடன் ரயில் கண்ணூர் சென்றடைந்தது. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கியது.
தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க என்.ஐ.ஏ போலீசார் களத்தில் இறங்கினர். ரயில் பெட்டியில் இருந்து தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். கொலை சம்பவத்தின் போது அப்பெட்டியில் இருந்த நபர்களிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக கேரள போலீசார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. குற்றவாளியை கண்டுபிடிக்க உதவினால் 2 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த மர்ம நபரின் உத்தேச வரைபடம் பல்வேறு காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி என்பவரை போலீசார் கைது செய்தனர். தீ எரிப்பு சம்பவத்தில் தீவிரவாத இயக்கத்தினருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் செய்பியின் சொந்த ஊர் டெல்லி ஷகீன்பாக் ஆகும். இதனால் டெல்லி மற்றும் கேரள போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் டெல்லியில் ஷாருக் செய்பியுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஷாருக் செய்பியுடன் தொடர்பு வைத்திருந்த டெல்லியை சேர்ந்த முகம்மது ஷாபி, 46 மற்றும் அவருடைய மகனை விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொச்சிக்கு வரவழைத்தனர். இதை தொடர்ந்து முகம்மது ஷாபியும், அவரது மகனும் கொச்சிக்கு வந்தனர். இவர்கள் கொச்சியில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.
வியாழக்கிழமையன்று இருவரும் விசாரணைக்கு ஆஜரானார்கள். சனிக்கிழமையான இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று என்ஐஏ அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் முகம்மது ஷாபி விடுதி கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து கொச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து முகம்மது ஷாபியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணைக்கு வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications