கேரளா: ரயில் பயணிகளுக்கு தீ வைத்த ஷாருக் சைபி உ.பி.யில் அதிரடி கைது!
திருவனந்தபுரம்: கேரளா ரயிலில் பயணிகளை தீ வைத்து படுகொலை செய்ய முயன்ற ஷாருக் சைபி என்ற நபர் உத்தரப்பிரதேசத்தில் பதுங்கி இருந்த போது சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.
Recommended Video
கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆலப்புழா- கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. கோழிக்கோடு ரயில் நிலையத்தை கடந்த நிலையில் ரயில் சென்று கொண்டிருந்த போது பயணிகளில் ஒருவர் சக பயணி மீது தீ வைத்து எரித்து கொல்ல முயன்றார். இச்சம்பவத்தில் பயணிகள் 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. மேலும் போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட போது தண்டவாளத்தில் 3 உடல்கள், தீக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. தவ்பீக், ரெஹானா மற்றும் ஒரு குழந்தை ஆகியோரது உடல்களே தண்டவாளத்தில் கைப்பற்றப்பட்டன.

ரயிலில் பயணம் செய்த நபர், எதிரே உட்கார்ந்திருந்த தவ்பீக், ரெஹ்னா உள்ளிட்டோர் மீது ஸ்பிரே மூலம் பெட்ரோல் தெளித்துள்ளார். பின்னர் அவர்கள் மீது தீ வைத்து விட்டு ஓடும் ரயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தி குதித்தார். அந்த ரயிலை பின் தொடர்ந்து டூ வீலரில் வந்தவருடன் அந்நபர் தப்பி சென்றார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர. இதனைத் தொடர்ந்து அந்த நபரின் உருவ படம் வெளியிடப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்த ஷாருக் சைபி என்ற அந்நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications