குவைத் தீ விபத்து: கேரளாவை சேர்ந்த 24 பேர், 5 தமிழர்கள் உட்பட 43 இந்தியர்கள் பலி!
திருவனந்தபுரம்: குவைத் தீ விபத்தில் 43 இந்தியர்கள் பலியாகி இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் 24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பலியான தமிழர்கள், படுகாயம் அடைந்த தமிழர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றன.
தெற்கு குவைத்தின் மங்கஃப் நகரில் 6 மாடி அடுக்கு மாடிக் கட்டிடத்தில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இக்கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவுதான் தீ விபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது. கீழ் தளத்தில் பற்றிய தீ 6 மாடி கட்டிடம் முழுவதும் பரவியது.

(நன்றி: https://www.onmanorama.com/)
இக்கட்டிடத்தில் 150-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழர்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த தீ கட்டிடம் முழுவதும் பரவியதால் தீயில் கருகியும் கரும்புகையில் சிக்கி மூச்சு திணறியும் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
குவைத் தீ விபத்தில் தற்போதுவரை மொத்தம் 43 இந்தியர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த 24 பேரில் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரளா மாநிலத்தவர் 12 பேர் விவரம்:
1. ஆகாஷ் நாயர்
2. உமருதீன் சமீர்
3. ஸ்டெஃபின் ஆபிரகாம் சாபு
4. கேஆர் ரஞ்சித்
5. கேலு பொன்மலேரி
6.பிவி முரளீதரன்
7. ஷாஜன் ஜார்ஜ்
8. லூகோஸ்
9. சாஜூ வர்கீஸ்
10. தாமஸ் உம்மன்
11. விஸ்வாஸ் கிருஷ்ணன்
12. நூஹ்
தமிழர்கள் கதி என்ன?: குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவரை 5 தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:
இந்தியாவிற்குள்: +91 1800 309 3793
வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 என தெரிவித்திருந்தார்.
மத்திய இணை அமைச்சர் கேவி சிங்: இதனிடையே குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் உடல்களை நாட்டுக்கு கொண்டு வரவும் படுகாயமடைந்தவர்கள் நிலைமையை ஆராயவும் மத்திய இணை அமைச்சர் கேவி சிங் அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications