வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத 66 உடல்கள்.. 72 மணிநேரத்தில் அடக்கம் செய்ய கேரளா அரசு உத்தரவு!
திருவனந்தபுரம்: கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியான 66 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. இதனையடுத்து அடையாளம் தெரியாத 66 உடல்களையும் அடுத்த 72 மணிநேரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என கேரளா மாநில அரசு அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களுடன் உத்தரவிட்டுள்ளது. நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாடு மலைப் பகுதிகளில் இன்றும் 6-வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கேரளா மாநிலம் வயநாடு சூரல்மலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மிக கடுமையான நிலச்சரிவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளன. வயநாடு மாவட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 360-ஐ கடந்துள்ளது.

வயநாடு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இன்றும் 2 அடையாளம் தெரியாத உடல்கள் மீட்கப்பட்டன.
வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 200 பேர் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. மொத்தம் 1208 வீடுகளை நிலச்சரிவு காவு வாங்கி இருக்கிறது. முண்டக்கை பகுதியில் 540, சூரல்மலையில் 600, அட்டமலையில் 68 வீடுகள் மண்ணோடு மண்ணாக புதையுண்டு போயுள்ளன. 3,700 ஏக்கர் விளைநிலமும் நாசமாகிப் போனது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 49 குழந்தைகள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இடங்களையும் மீட்புப் பணிகளையும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இன்று நேரில் பார்வையிட்டார். இந்த நிலையில் கேரளா மாநில அரசு, மீட்புப் பணி அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், அடையாளம் காணப்படாத 66 உடல்களை அடுத்த 72 மணிநேரத்தில் உரிய வழிகாட்டுதல்களுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பது அந்த உத்தரவாகும். அனைத்து அடையாளம் காணப்படாத உடல்களையும் பிரேத பரிசோதனை செய்து, மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்கவும் கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது. மெப்பாடி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறைப்படி தெரிவித்து இந்த உடல்களை அடக்கம் செய்யவும் அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications