Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடர் வெற்றி.. 'கடவுளின் தேசத்தில்' மீண்டும் கால்பதித்த இடதுசாரிகள்.. வரலாற்றை மாற்றிஎழுதியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ''கடவுளின் தேசம் '' என்று அழைக்கப்படும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி(எல்.டி.எஃப்) அசுர வெற்றி பெற்று மீண்டும் அரியணையில் அமர்ந்துள்ளது.

மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை அப்படியே வாரி சுருட்டியது. பினராயி விஜயனுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று கருதப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி(யு.டி.எஃப்) 41 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஏமாற்றம் அளித்தது.

இந்த முறை கண்டிப்பாக அதிசயம் நிகழ்த்த வேண்டும் என்ற முடிவில் தனியாக கோதாவில் குதித்த பா.ஜ.க ஒன்றில் கூட வெற்றி பெறாமல் 'டக்' அவுட்டாகி வெறும் கையுடன் நடையை கட்டியது.

வரலாறு மாறியது

வரலாறு மாறியது

கடந்த நான்கு தசாப்தங்களாக எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் மாறி, மாறி முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து வந்த நிலையில், இந்த முறை வரலாற்றை மாற்றி தொடர்ந்து 2-வது முறையாக நாற்காலியில் கெத்தாக அமர்ந்துள்ளார் பினராயி விஜயன். 5 வருடங்களுக்கு ஒரு முறை தங்கள் மனதை மாற்றிக் கொள்ளும் சேட்டன், சேச்சிகள் இந்த முறை வரலாற்றை மாற்றி எழுதியது ஏன்? என்பதை லோக்னிட்டி-சி.எஸ்.டி.எஸ் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய ஆய்வில் தெளிவாக கொட்டி விட்டனர்.

51% பேர் விருப்பம்

51% பேர் விருப்பம்

எல்.டி.எஃப் கூட்டணிக்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவது குறித்து நீங்கள் விரும்பினீர்களா ? என்று லோக்னிட்டி-சி.எஸ்.டி.எஸ் சார்பில் முதல் கேள்வி கேட்டபோது, 51% பேர் 'ஆம்' என்று கண்ணை மூடிக் கொண்டு பதிலளித்தனர். 27% பேர் வேண்டாம் என்று கூறினார்கள். 22% பேர் நமக்கு எதுக்கு வம்பு? என்று பதிலளிக்காமல் நழுவி சென்று விட்டனர். இதே நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் யு.டி.எஃப் கூட்டணி வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்று கேள்வி கேட்டது. அப்போது 49% பேர் இல்லை என்று கூறினார்கள். 41% மட்டுமே ஆம் என்று கூறினார்கள்.

முழு திருப்தி

முழு திருப்தி

தற்போது 2021-ல் கடந்த 5 ஆண்டுகளில் பினராயி விஜயன் அரசின் செயல்பாடுகள் திருப்தியாக இருந்ததா? என்று கேட்ட கேள்விக்கு, நான்கில் மூன்று பகுதியினர் அதாவது சுமார் 73% பேர் 'ஆம்' என்று தலையசைத்தனர். அரசின் செயல்பாட்டில் முழு திருப்தி என்று 23% பேர் அடித்து கூறினார்கள். இதே கேள்வியுடன் நாம் 2016-க்கு சென்றோம் என்றால் காங்கிரஸ் அரசின் செயல்பாடு மீது திருப்தி என்று 59% பேரே கூறினார்கள். 6% பேர் மட்டுமே முழு திருப்தி என்று தெரிவித்து இருந்தனர். இந்த ஒரு தரவே எல்.டி.எஃப் மீண்டும் முழு வீரியத்துடன் ஆட்சிக்கு வந்ததுக்கு சாட்சியாய் நிற்கிறது.

மக்களிடம் சேர்ந்த உதவிகள்

மக்களிடம் சேர்ந்த உதவிகள்

அடுத்ததாக எல்.டி.எஃப் ஆட்சி சிறந்ததா? யு.டி.எஃப் ஆட்சி சிறந்ததா? என்ற கேள்வியை கேட்டு முடிப்பதற்குள் எல்.டி.எஃப் தான் என்று 45% பேர் கையை தூக்கினார்கள். 28% என்று யு.டி.எஃப்புக்கு ஆதரவாக தூக்கும் கரங்கள் மிகவும் குறைவாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் கேரளா சந்தித்த 2 பெரு வெள்ளம், நிபா வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் காலங்களில் முதல்வர் பினராயி விஜயன் சிறப்பாக செயல்பட்டு நிவாரண உதவிகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார் என்று கூறப்படுவது உண்டு.

மக்கள் மனதில் நின்ற பினராயி

மக்கள் மனதில் நின்ற பினராயி

இதனை வைத்து வினாவை எழுப்பியபோது வெறும் 6% பேரை தவிர 94% பேர் ''அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயன் அடைந்தோம்'' என்று புன்னகை மலர தெரிவித்தனர். (இந்த பதிலே தற்போதைய எல்.டி.எஃப் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்து விட்டது) அவர்களின் புன்னகை சுருங்குவதற்குள், '' அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்? என விரும்புகீறீர்கள் என்று சுடச்சுட கேள்வி வீசப்பட்டது. ''பினராயிதான் வேறு யாரு'' என்று 36% பேரும், காங்கிரசின் உம்மன் சாண்டிதான் என்று 18% பேரும், எங்க சேச்சி(அக்கா) கே.கே. ஷைலாஜா( கேரள சுகாதாரத்துறை அமைச்சர்) தான் வரணும் என்று 3% பேர் தெரிவித்தனர். ஆச்சரியப்படும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவுக்கு ஆதரவாக 3% பேர் குரலை உயர்த்தினார்கள். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரனுக்கு ஆதரவாக 2% குரல்களே வந்தன.

 பிரச்சினை என்றால் என்ன?

பிரச்சினை என்றால் என்ன?

ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்த்த கேரள தங்க கடத்தல் வழக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு தினம் தினம் தலைப்பு செய்திகளில் வலம் வந்து கொண்டிருந்த சபரிமலை விவகாரம் ஆகியவற்றை மனதில் வைத்து வாக்கு பதிவு செய்தீர்களா? என்று வினாவை தொடுத்தபோது, '' கேரளாவில் இப்படி ஒரு பிரச்சினை நடந்ததா? எப்போ? என்று 41% -51% பேர் கூலாக பதிலளித்தனர். மற்ற சிலர் இதுபற்றி எனக்கு சரியாக தெரியாது? என்று தெரிவித்தனர். வெறும் 2% பேர் மட்டுமே ''இதை வைத்துதான் ஓட்டு போட்டேன்'' என்று கூறினார்கள். மேற்கண்ட இந்த பிரச்சினைகள் முதல்வர் பினராயிக்கு எதிராக முடியும் என்று காங்கிரஸ், பாஜக கட்சிகள் அதிகம் எதிர்பார்த்தன. - pls take this

கட்சிக்கு ஆதரவு

கட்சிக்கு ஆதரவு

ஆனால் இவை எல்லாம் மக்கள் மனதில் பதியவே இல்லை என்பதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஆகவே இதுவும் ''வெற்றி நடை போடும் கேரளாவே..'' என்று பினராயி விஜயன் மீண்டும் உரக்க முழங்குவதற்கு காரணமாகி விட்டது. இந்த ஆய்வுகளின்படி பதிலளித்தவர்களில் 10-ல் ஆறு பேர் (61%) கட்சியின் அடிப்படையில் வாக்களித்ததாக கூறியுள்ளனர். 10-ல் மூன்று பேர் (29%) வேட்பாளரின் அடிப்படையில் வாக்களித்ததாகக் தெரிவித்தனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 10 வாக்காளர்களில் ஏழு பேர் தங்கள் மாநிலத்தின் பிரச்சினைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

கைகொடுத்த ஈழவர் சமூக மக்கள்

கைகொடுத்த ஈழவர் சமூக மக்கள்

எனவே பிரச்சினைகள் மக்கள் காதுகளுக்கு போய் சேரும் முன்பே, அரசின் நலத்திட்டங்கள் மக்களின் கையில் சென்றடைந்ததும் எல்.டி.எஃப் வெற்றிக்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. சபரிமலை விவகாரத்தை கையாண்ட விதத்தில் கடந்த தேர்தலை விட இந்த முறை நாயர் சமூக வாக்குகளை கணிசமாக இழந்துள்ளது ஆளும் எல்.டி.எஃப்.. ஆனால் ஈழவர் சமுதாய வாக்குகளை(53%), முஸ்லீம், கிறிஸ்தவ சமூக மக்களின் வாக்குகளை கையோடு அள்ளிக் கொண்டது. இந்த சமூக மக்களின் வாக்குகளும், அரசின் செயல்திறனும் , பினராயி விஜயனின் தலைமை பண்பும் பெரிய வெற்றியை ருசிக்க சான்றாக இருந்துள்ளது.

எடுபடாமல் போன சபரிமலை விவகாரம்

எடுபடாமல் போன சபரிமலை விவகாரம்

காங்கிரசின் யு.டி.எஃப் கூட்டணி வலுவான முதல்வர் வேட்பாளரை முன் வைக்காதது அந்த கட்சிக்கு தோல்வியாக அமைந்து விட்டது. சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்து சாதிக்க முயன்றது பாஜக. ஆனால் அது மக்களிடம் சுத்தமாக எடுபடவில்லை. வெறும் 1% பேர் மட்டுமே சபரிமலை விவகாரம் அறிந்து ஓட்டு போட்டதாக கூறி இருக்கிறார்கள். பா.ஜ.க.வால் முதலில் முதல்வர் வேட்பாளர் என்ற அளவுக்கு சொல்லப்பட்ட 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் மக்கள் மத்தியில் எடுபடாமல் போனதும் பாஜக பெரும் தோல்வி பெற காரணமாகி விட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+