சபதம் போட்டு மீசையை இழந்த கேரளா இடதுசாரி தொண்டர்.. வைரலாகும் வீடியோ!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஆளும் இடது முன்னணி தோல்வி அடைந்ததால் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தனது மீசையை இழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. கேரளாவில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது. ஆளுங்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மேலும் நகராட்சிகளிலும் காங்கிரஸ் கூட்டணி (UDF) கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக திருவனநாதபுரத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக.
இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இடது முன்னணியைச் சேர்ந்த LDF தொண்டர் ஒருவர் தனது மீசையை மழித்துள்ளார். பத்தனம்திட்டாவில் எல்டிஎஃப் வெற்றி பெறவில்லை என்றால், தனது மீசையை மழித்து விடுவதாக அக்கட்சியின் தீவிர தொண்டரான பாபு வர்கீஸ், தேர்தலுக்கு முன்னதாக அப்பகுதியினரிடம் சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பத்தனம்திட்டா மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 16 இடங்களில் 12 இடங்களை காங்கிரசின் UDF வென்றுள்ளது. முந்தைய தேர்தல்களில் 12 இடங்களை வென்ற LDF இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.
பத்தனம்திட்டாவில் யுடிஎஃப் வெற்றி பெற்று, இடது முன்னணி தோல்வியைச் சந்தித்தது. இதனால், தான் தேர்தலுக்கு முன்பு சொன்னதுபோலவே தனது மீசையை எல்டிஎஃப் தொண்டர் வழித்துக் கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.













Click it and Unblock the Notifications